இவ்வளவுதாங்க திமுகவுக்கும், அதிமுகவுக்கும் உள்ள வித்தியாசம்!
Recommended Video
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அதிமுக தொண்டர்கள் நடந்துகொண்ட விதமும், திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் திமுக தொண்டர்கள் நடந்து கொள்ளும் விதம் மாறுபட்டதாக இருக்கிறது.
2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி நள்ளிரவில் ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி இருந்த அவருக்கு தொடர்ந்து, சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. 75 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது.
இதன் நடுவே ஜெயலலிதாவை சந்திப்பதற்கு அதிமுக தொண்டர்கள் முதல் ஆளுநர் வரை யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. அவர் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டபோது கூட யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை என்பதுதான் அதில் கவனிக்கத்தக்கது.
ஒரு நபர் சாம்ராஜ்யம்
தொண்டர்கள் மருத்துவமனையின் வெளியே நிறுத்தப்பட்டனர். முக்கிய பிரமுகர்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் மாடி வரை சென்று சசிகலா உள்ளிட்டோர் இடம் தான் உடல்நிலை குறித்து கேட்டறிந்து திரும்பினார். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி விஷயத்தில் அப்படி எந்த ஒளிவுமறைவும் கிடையாது ஏற்கெனவே அவர் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது கூட அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளிப்படையாக பகிரப்பட்டன.
வீடியோ எடுத்த ஊடகங்கள்
இன்றும் கூட முக்கிய நிர்வாகிகள் பலரும் மருத்துவமனை சென்று கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். நேற்று அவரை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனை அழைத்துச் சென்ற போது கூட ஊடகங்கள் அதை வீடியோவாக எடுக்க முடிந்தது. ஆனால் மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகள் கூட இப்போது இல்லை.
மக்கள் போராட்டம்
அதிமுக மற்றும் திமுக தொண்டர்கள் நடுவே ஒரு பெரிய வித்தியாசத்தைக் இந்த காலகட்டத்தில் பார்க்க முடிந்தது. நேற்றைய தினம் கருணாநிதி உடல்நிலை நலிவுற்ற செய்தி அறிந்த பிறகும் கூட தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு எதிராக திமுகவினர் மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். போராட்டத்தை கைவிட திமுக தலைமை உத்தரவிடவில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, அதிமுகவினர் பல்வேறு வழிபாடுகள் வேண்டுதலில் ஈடுபட்டிருந்த நிலையில் திமுகவினர் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்து உள்ளனர் என்று திமுக நெட்டிசன்கள் இணையதளங்களில் பெருமிதம் தெரிவித்திருந்தனர்.
அழகிரியும், ஸ்டாலினும்
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது நெருங்கிய ரத்த உறவுகள் கூட அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை .ஆனால் திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதித்த பிறகு கூட அவரது இரத்த உறவுகள் மட்டுமின்றி கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கருத்து வேறுபாடுகள் கடந்த காலங்களில் இருந்தபோதும் கூட ஸ்டாலின், அழகிரி உள்ளிட்டோர் மருத்துவமனையில் இணைந்து தங்களது தந்தையின் உடல் நலத்தை பேணி வருகின்றனர்.
மருத்துவமனைக்குள் நிர்வாகிகள்
மருத்துவமனைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட, திமுக நிர்வாகி தமிழன் பிரசன்னா கதறி அழுத காட்சி கூட இணைய தளங்களில் பரவி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது இப்படி உணர்வு பூர்வமாக பெரிய நிர்வாகிகள் யாரையும் பார்க்க முடியவில்லை. டிஆர் பாலு, துரைமுருகன் உட்பட பல்வேறு நிர்வாகிகளும் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் ஸ்டாலினுக்கு இணையாக நின்று டாக்டர்களிடம் பேச முடிவதை பார்க்க முடிகிறது.