அடுத்தடுத்து பாயும் ஐடி ரெய்டுகள்.. என்ன நடக்குதுன்னே புரியலையே!
சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் வரலாறு காணாத வருமான வரிச் சோதனைகள். ஏன் நடக்கிறது, எதற்கு நடக்கிறது என்றே புரியாத அளவுக்கு வத வதவென. இப்போது ஜெயா டிவி அலுவலகத்தில் ரெய்டு.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியல் சூழல் மகா கேவலமாக உள்ளது. என்ன நடக்கிறது என்று சத்தியமாக யாருக்குமே புரியவில்லை. அதை விட பெரிய குழப்பம் இந்த வருமான வரித்துறை சோதனைகள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழகத்தில் பெருமளவில் வருமான வரிச் சோதனைகள் நடந்து வருகின்றன.
வரலாறு காணாத அளவில் என்று கூறும் அளவுக்கு சோதனைகள் நடந்து வருகின்றன. ரெய்டு டீமீல் உள்ள பல ஊழியர்களும் வெறுத்துப் போகும் அளவுக்கு ரெய்டுகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

எதற்காக நடக்கின்றன ரெய்டுகள்
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் வீடு, தலைமைச் செயலக அலுவலகம் ஆகியவற்றில் ரெய்டு நடந்தது. அதன் முடிவு இதுவரை தெரியவில்லை. அதேபோல அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடந்தது. அதன் முடிவும் இதுவரை தெரியவில்லை.

பல இடங்களில் ரெய்டு
இதேபோல மேலும் பல இடங்களில் ரெய்டுகள் நடந்தன. அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் ரெய்டுகள் நடந்தன. பல கல்வி நிறுவனங்களில் ரெய்டுகள் நடந்தன. ஆனால் எதிலுமே ஒரு தெளிவில்லை.

ஜெயா டிவியில் ரெய்டு
இந்த நிலையில் இன்று ஜெயா டிவி அலுவலகத்தில் ரெய்டு நடந்துள்ளது. ஜெயா டிவி தினகரன் குடும்பக் கட்டுப்பாட்டில் உள்ளது. இரட்டை இலை தொடர்பான வழக்கின் விசாரணை நேற்றுதான் முடிவடைந்து தீர்ப்பை ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம். இந்த நிலையில் ரெய்டு நடந்துள்ளது.

அரசியல் காரணமா
வருமான வரி ஏய்ப்பு மட்டும்தான் இதற்குக் காரணமா அல்லது அரசியல் ரீதியான காரணம் ஏதேனும் உள்ளதா என்பது பெரும் குழப்பமாக உள்ளது. எத்தனை இடத்தில் ரெய்டு நடக்கிறது என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த ரெய்டும் அப்படியே விவரம் தெரிவிக்கப்படாமலேயே போய் விடுமா அல்லது உண்மையிலேயே வருமான வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்படுமா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications