கருணாநிதி இடத்துக்கு உயர்வது அத்தனை எளிதல்ல.. ஸ்டாலின் முன் உள்ள சவால்கள்!
ஸ்டாலினுக்கு ஏராளமான பொறுப்புகள் வந்து சேர்ந்துள்ளன.
Recommended Video
சென்னை: வாரிசு அரசியல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அண்ணாவிடம் ஒருமுறை கேட்டபோது, அவர் கூறினார், "ஐதராபாத் நிஜாம்களுக்கு இருக்க வேண்டிய கவலைகள் இது. நமக்கு இந்த சிந்தனையே வரக்கூடாது" என்றாராம்.
ஆனால் அரசியல் என்பதும், தந்தைக்குப் பின் தனயன் ஆட்சிக்கு வருவது என்பதும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டே வந்துள்ளது. ஒரு சாரார் மத்தியில் இது விவாதப் பொருளாக உள்ளபோதிலும் நல்லாட்சியை யார் செய்தால் என்ன? அதன் பலன்கள் மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்ற மனப்பக்குவம் தமிழக மக்களுக்கு இருக்கவே செய்கிறது.
வலிமை அருகில் இல்லை
அந்த வாரிசு வரிசையில், திமுகவும் ஒன்று. தற்போது கருணாநிதி மறைவுக்கு பிறகு மு.க.ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்பு வந்துள்ளது. கூடுதல் பாரம் தலையில் விழுந்துள்ளது. கூடுதல் கடமைகள் கண்முன் வரிசைகட்டி நிற்கிறது. தற்போது ஸ்டாலினுக்கு கலைஞர் என்ற வலிமை மிக்க பக்க பலம் இல்லை. கருணாநிதி என்ற கவசம் இல்லை. தனித்தே செயல்படவேண்டிய கட்டாயமும், நிர்ப்பந்தமும், சூழலும் ஏற்பட்டுள்ளது.
கருணாநிதியின் சாமர்த்தியங்கள்
கருணாநிதியின் நீண்ட அரசியல் பாரம்பரியத்திற்கும், நெடிய ஆட்சிப் பயணத்திற்கும், ஆழ்ந்த ராஜதந்திரத்திற்கும் ஈடுகொடுக்க முடியாமல் எவ்வளவோ பேர் திணறினார்கள். இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி முதல் இலவச வீட்டு மனை பட்டாவரை எவ்வளவோ நலத்திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றினாலும் மக்களிடையே அதை வாக்குகளாக மாற்றும் சாமர்த்தியம் கருணாநிதிக்கு இருந்தது.
சகித்து கொள்ளும் பாங்கு
கருணாநிதி அரிய ஆற்றல்களையும், பதவிகளை வகித்தாலும் அனைவரையும் மதித்துப் போற்றும் மாண்புடையவர். யாரையுமே ஒருமையில் அழைக்காத உயர்ந்த பண்பாளர். இன்று ஏராளமான கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் போன்றோர் கட்சிக்கு அப்பாற்பட்டு கலைஞரை நேசிப்பததற்கு காரணம் அவர் வகித்த பதவி கிடையாது. அவரது பண்பும், பாசமும், வயதைக் கடந்த மரியாதையும்தான். அதேபோல, ஆட்சி நிர்வாகம், ஸ்தாபன முதிர்ச்சி, தொலைதூரப் பார்வை, எவ்வளவு பிரச்சினையாக இருந்தாலும் எளிதில் கையாளும் திறமை, மாற்றாரின் கடும் விமர்சனங்களையும் சகித்து கொள்ளும் பக்குவம் போன்ற அனைத்தும் கருணாநிதிக்கு உரியவை.
சென்னை பாலங்கள் சாட்சி
மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக, பொருளாளராக, செயல்தலைவராக பதவி வகித்து போதுமான நிர்வாக அனுபவங்களைப் பெற்றுள்ளார். தந்தை அளவுக்கு இல்லையென்றாலும் நல்ல பேச்சாளராக பரிணமித்துள்ளார். மேயராக இருந்தபோது கட்டிய ஏராளமான பாலங்களே அதற்கு சாட்சி.
ஸ்டாலினின் நிர்ப்பந்தங்கள்
அதேபோல ஸ்டாலினிடமும், நிர்வாகத்திறமை, கடும் உழைப்பு, எதிர்க்கட்சியினரை தரக்குறைவாகவோ, கடுமையாகவோ, எடுத்தெறிந்து பேசாத நாகரீகம், தமது ஆட்சியின் சாதனைகளை மட்டுமே விளக்கி ஆதரவு கேட்கும் பெருந்தன்மை, அனைவராலும் பாராட்டப்படும் அளவிற்கு பேச்சாற்றல், தொலைதூர நோக்கோடு திட்டமிடுதல், அதற்காக சுறுசுறுப்பாக செயல்படுதல் போன்றவை அனைத்துமே உண்டு. ஆனாலும் கருணாநிதியை போலவே அனைத்திலும் கோலோச்ச வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.
என்னென்ன மாற்றங்கள்?
இன்றைய நிலையில், என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்? எப்படி அனைத்தையும் எதிர்கொள்ள போகிறார்? எப்படி வருங்காலத்தில் தன் தோள் மீதுள்ள கட்சியை தூக்கி நிறுத்த போகிறார்? அதற்காக அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டி வரும்? பெரிய மாற்றம் எதுவுமே செய்ய தேவையில்லை. மூத்த, நடுத்தர வயதுள்ள முன்னணி திமுகவினர்களை அனுசரித்து போக வேண்டியது வரும். அதேபோல குடும்பத்து அரசியல்வாதிகளான மு.க. அழகிரி முதல் கனிமொழி, தயாநிதி மாறன் வரை அத்துணை பேரின் முழு ஒத்துழைப்புடன் அதை நடத்திட வேண்டியது வரும்.
அதிரடிகள் தேவை
குடும்பத்தார் ஆனாலும் குற்றம் குற்றமே என்று கருதி உறுதியான நடவடிக்கை மூலம் கட்சியின் ஆதிக்கத்திலிருந்து அவர்களை விலக்கி வைத்து, திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்ட - தியாகங்கள் செய்த - கடுமையாக உழைத்த - எளிமையும் நேர்மையும் கொண்ட திறமையான இளைஞர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட வேண்டியது வரும். சில அதிரடிகளில் இறங்க வேண்டியது இருக்கும். DECENT POLITICS என்பார்களே, அது இங்கே இப்போதுள்ளவர்களிடம் எடுபடாது. சில சூழ்நிலைகளில் அதிரடி பாணியையும் அதே நேரத்தில் சாதுர்யம் கலந்த முடிவினையும் எடுக்க வேண்டியது வரும்.
கல்லாதது உலகளவு
அனைத்து மாவட்ட கட்சி தொண்டர்களையும் அரவணைத்து செல்ல வேண்டியது வரும். இவ்வளவேதான்!! இதனை மட்டும் ஸ்டாலின் செம்மைப்படுத்தி விட்டால், திமுக என்னும் வரலாற்று சிறப்பு மிக்க திராவிடர் முன்னேற்ற கழகம் என்றுமே பிரகாசித்து பளிச்சிட்டு நிற்கும். "கலைஞரிடம் கற்றது கை மண்ணளவு... கல்லாதது உலகளவு" என்றாலும், ஸ்டாலினை பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டு ஆதரவளித்து வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றே.