ரயில் நிலையங்களை தனியார்மயமாக்கினால் நாங்க எங்க கடலை போடறது.. இது அவுக கவலை!
ரயில் நிலையங்கள் தனியார்மயமாக்கினால் பொதுமக்களுக்கு எத்தனையோ பாதிப்புகள் ஏற்படும் என்பது ஒருபுறம் இருந்தாலும் காதலர்களுக்கு இந்த அறிவிப்பானது பேரிடியாகவே உள்ளது.
சென்னை: ரயில் நிலையங்கள் தனியார்மயமாக்கினால் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை நினைத்து கவலைப்படுவதைக் காட்டிலும் பல மடங்கு கவலை காதலர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.
அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை என 25 ரயில் நிலையங்கள் அப்படியே தனியாருக்கு தாரைவார்க்கப்படவுள்ளன.
இவற்றை வாங்குவதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் பல முண்டியடித்து கொண்டு வருகின்றன. மேலும் இந்த ரயில் நிலையங்களை வாங்க இவர்கள் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனராம்.
மக்கள் அச்சம்
இதுபோல் ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டால் பிளாட்பாரம் கட்டணம் முதல் வாகனங்களின் பார்க்கிங் கட்டணம் வரை கட்டணங்கள் அதிகரிக்கலாம். இத்தனையேன் கழிவறைகளின் கட்டணங்கள் கூட அதிகமாக வசூலிக்கலாம். அதுமட்டுமல்லாமல் ரயில் நிலையங்களில் போடப்பட்டுள்ள கடைகளின் வாடகைகள் உயர்த்தப்பட்டால் பொருள்களின் விலைகளும் உயரும் என்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ரயில் கட்டணம் உயரலாம்
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பஸ் கட்டணங்கள் 150 மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் ரயில் கட்டணங்களின் விலை குறைவாக உள்ளது பயணிகளுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஒரு வேளை கட்டண நிர்ணய உரிமையையும் தனியாருக்கு கொடுக்கப்பட்டால் ரயில் கட்டணம் பஸ் கட்டணத்தை காட்டிலும் பல மடங்கு உயர வாய்ப்புகள் உள்ளன.
மதுவிலக்கு
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மதுபானக் கடைகளுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் ரயில் நிலையங்கள் பார்கள் வைக்க தனியார் நிறுவனங்கள் உத்தேசித்துள்ளதாம். இவ்வாறு பார்கள் வைக்கப்பட்டால் மதுவிலக்கு கொண்டு வர நடைபெறும் போராட்டத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். ரயில் நிலைய பார்களில் கண்ணு மண்ணு தெரியாமல் குடித்து விட்டு ரயில் ஏறும்போது தவறி விழுந்து உயிரிழப்புகள் ஏற்படலாம். மேலும் ரயில் தண்டவாளத்தை கடக்க முயலும் போதும் மதுவால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
குடிமகன்களால் தொல்லை
பார்களில் குடிக்கும் குடிமகன்கள் ரயில்களில் செல்லும் பயணிகளிடம் வம்பிழுப்பர். இதனால் தேவையற்ற வன்செயல்கள், திருட்டுச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. ரயில் நிலையங்கள் என்றாலே நினைவுக்கு வருவது சிறு சிறு வியாபாரிகள், பிச்சை எடுப்போர்தான்.
சிறு வியாபாரிகள் பாதிப்பு
மாற்றுத் திறனாளிகள்,சிறு வணிகர்கள் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பூ, காய், முருக்கு, பிஸ்கெட்டுகள், பழங்கள், வேர்க்கடலை, சுண்டல், சமோசா, பேன்ஸி பொருள்களான கொண்டை ஊசி, சேப்டி பின், பொட்டு, வளையல், தோடு உள்ளிட்டவற்றை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். ரயில் நிலையங்கள் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் சென்றால் மாற்றுத்திறனாளிகள், சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
பிச்சை எடுக்கும் தொழிலாளிகள்
ரயில் நிலையங்கள் தனியார்மயமாகினால் பிச்சை எடுக்கும் தொழிலாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும். பெரும்பாலும் ரயில்களில் பிச்சை எடுப்போர் மாற்றுத் திறனாளிகளே. தனியார் நிறுவனத்தினர் இவர்களை உள்ளேயே சேர்க்க மாட்டார்கள். மேலும் வயிற்றை கழுவவே பிச்சை எடுக்கும் இவர்களிடம் பிளாட்பாரம் கட்டணம் வசூலித்தால் எப்படி. ரயில் நிலையங்களில் பல சிசிடிவி கேமராக்கள் இல்லாததாலும் சரிவர வேலை செய்யாததாலும் அங்கு நடைபெறும் குற்றச்செயல்களுக்கு முக்கிய சாட்சியாக இருப்பதும் இதுபோன்ற ரயில் நிலையங்களில் தங்கியிருக்கும் பிச்சைக்காரர்களே. இவர்களையும் தனியார் நிறுவனத்தினர் துரத்தி விடுவர்.
இவர்களுக்கு பிரச்சினையாச்சே?
ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர்கள் என்று காதலர்கள் வலம் வர இடங்கள் நிறைய உள்ளன. எனினும் இந்த இடங்களுக்கு சென்றால் நமது பர்சை காலியாக்கி, கிரெட் கார்டு முதல் விசிட்டிங் கார்டு வரை பெண்கள் தேய்த்து விடுவர் என்ற அச்சத்தின் காரணமாக ஏராளமான காதல் ஜோடிகள் தங்கள் மீட்டிங் ஸ்பாட்டாக ரயில் நிலையங்களை தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு பைசா செல்வில்லாமல் பிளாட்பாரத்தில் விற்கும் கடலையை கொரித்து கொண்டே கடலை போடும் காதல் ஜோடிகளின் நிலை என்னவாகும். எத்தனை பொது நலங்கள் இருந்தாலும் சுயநலமும் தேவைதானே.