சசிகலா, தினகரன் பதவியை பறிக்கப்படுமா?.. இன்று மாலைக்குள் அதிரடி நடக்குமா??
அதிமுகவின் முக்கிய பதவிகளில் உள்ள சசிகலா, தினகரனின் முக்கிய பதவிகள் பறிக்கப்படுவது குறித்து ஓபிஎஸ் அணியினர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: அதிமுகவின் முக்கிய பதவிகளில் உள்ள சசிகலா, தினகரனின் பதவிகள் பறிக்கப்படுமா அல்லது நீடிக்குமா என்பது தொடர்பாக ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நேற்று நடைபெற்ற விசாரணயில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசத்தை இரு அணிகளும் கேட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் தெரிவிக்கையில், அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தைக்கு தயார் என்றார். இதை லோக்சபா துணைத் தலைவர் தம்பிதுரையும் வரவேற்றார்.
அமைச்சர்கள் ஆலோசனை
இந்நிலையில் தினகரன் சசிகலாவை சந்திக்க பெங்களூர் சென்றிருந்த நிலையில் அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது இரு அணிகளும் இணைவதை வரவேற்று அமைச்சர்கள் பேசினர். இந்நிலையில் இன்று காலை சசிகலா கோஷ்டி அமைச்சர்கள் தினகரன் வீட்டில் ஆலோசனை நடத்தினர்.
ஓபிஎஸ் அணியினர் ஆலோசனை?
இந்நிலையில் கட்சியும், ஆட்சியும் ஒரே குடும்பத்தின் பிடியில் சிக்கக் கூடாது என்று அவ்வப்போது கூறிவந்த ஓ.பன்னீர் செல்வம், ஒரு வேளை அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்தால் சசிகலாவும், தினகரனும் அவரவர் பதவியில் நீடிக்க ஒப்புக் கொள்வாரா என்பது சந்தேகமே.
சசிகலா அணியினர் கப்சிப்
சசிகலா, தினகரன் அவரவர் பதவிகளை ராஜினாமா செய்வரா என்பது குறித்த கேள்விக்கு சசிகலா அணியினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அதிமுக இணைப்பு குறித்து தினகரனுடன் ஆலோசனை நடத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இணையுமா அதிமுக
மேலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்தும் இருவரிடமும் இருவேறு கருத்துகள் உள்ளன. இத்தகைய முரண்பாடான சூழ்நிலையில் இரு அணிகளும் இணையுமா என்று அரசியல் விமர்சகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
பதில் சொல்ல தயக்கம்
ஓபிஎஸ் அணியினரின் முடிவு குறித்து அந்த அணியை சேர்ந்த எம்எல்ஏ-க்களையும், நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் இதுகுறித்து அணியின் மூத்த நிர்வாகிகள் முடிவு எடுப்பர் என்று கூறி நேரிடையாக பதில் சொல்ல தயங்குகின்னறர். மேலும் இதுதொடர்பான அறிவிப்புகள் இன்று மாலைக்குள் வெளியாகும் என்று தெரிகிறது.