தொன்மையான மொழி தமிழை ஹைகோர்ட்டில் அனுமதிக்கலாம், ஹார்வேர்டு இருக்கைக்கு நிதி கொடுக்கலாமே மோடிஜி!
தமிழ் தொன்மையான மொழி என்று கூறும் பிரதமர் மோடி அதனை ஹைகோர்ட் வழக்காடு மொழியாக அறிவிக்கலாமே.
சென்னை : சமஸ்கிருதத்தை விட பழமையான தமிழ் மொழியை கற்றுக் கொள்ளாதது வருத்தமளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழ் மொழியின் பெருமையை உணர்ந்த மோடி தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கையான தமிழை ஹைகோர்ட் வழக்காடு மொழியாகவும், ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கவும் நிதி ஒதுக்கலாமே.
டெல்லியில் மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் கருத்தரங்கு டால்கோட்ரா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கூடியிருந்த மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். மொழிப்பிரச்சனையால் சரியாக உரையாட முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார்.
தமிழ்மொழி சமஸ்கிருதத்தை விடவும் பழமையானது என்றும், தமிழ் கற்றுக் கொள்ளாதது வருத்தம் அளிப்பதாகவும் மோடி பேசினார். தமிழில் தனக்கு வணக்கம் என்ற வார்த்தையை தவிர வேறு தெரியாது என்றும் மோடி குறிப்பிட்டார்.
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கலாமே
தமிழ் மொழியின் சிறப்பு பற்றி இவ்வளவு தெளிவாக பேசும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கலாமே. தமிழை ஹைகோர்ட் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது, ஆனால் உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி மத்திய அரசு அதனை தட்டிக் கழித்து வருகிறது.
சமஸ்கிருதத்தை விட்டுக் கொடுத்த பிரதமர்
தமிழ் மொழியை கற்க வேண்டும் என்று ஆசைப்படும் பிரதமர் ஏற்கனவே கற்றுக் கொண்டுள்ள மக்கள் பயன்பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கலாமே. இதுவரை சமஸ்கிருதத்தை முன்வைத்து வந்த பிரதமர் நரேந்திர மோடி சமஸ்கிருதத்தை விடவே தமிழ் தொன்மையான மொழி என்று முதன்முறையாக கூறி இருக்கிறார்.
தமிழ் இருக்கைக்கு நிதி தருவாரா
இதே போன்று ஹார்வேர்டுபல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க பலரிடமும் நிதி திரட்டப்பட்டு வருகிறது. நடிகர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழக அரசு என்று பலரும் தங்களால் முடிந்த அளவிற்கு நிதியுதவியை செய்து வருகின்றனர்.
மக்கள் அபிமானம் பெறலாம்
இந்நிலையில் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நிதி ஒதுக்கி பிரதமர் நரேந்திர மோடி தமிழின் தொன்மையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கலாமே. இதன் மூலம் அவர் விரும்பியபடியே தமிழ் மொழி பாதுகாக்கப்படுவதோடு, தமிழர்களிடம் இருந்து நல்ல அபிப்ராயத்தையும் பெற முடியும்.