விலகாத மர்மம்.. ஜெயலலிதாவுக்கு என்எஸ்ஜி பாதுகாப்பை விலக்க சொன்னது யார்?.. பரபர தகவல்கள்!
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட என்எஸ்ஜி பாதுகாப்பை விலக்கச் சொன்னது யார் என்பது குறித்து விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுத முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் 75 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவருடன் பாதுகாப்பு வீரர்கள் யாரும் உடன் செல்லவில்லை. அதுபோல் என்எஸ்ஜி பாதுகாப்பு படை வீரர்களும் ஆம்புலன்ஸ் பின்னால் செல்லவில்லை.

ஆறுமுகசாமி விசாரணை
மேலும் ஜெயலலிதா செப்டம்பர் 23,24,25 ஆகிய தேதிகளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் என்எஸ்ஜி வீரர்கள் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் சார்பில் தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவ், ஜெயலலிதா ஆலோசகராக இருந்த ஷீலாபால கிருஷ்ணன், தனிப்பிரிவு செயலாளராக இருந்த ஷீலா பிரியாவிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.

விலக்க முடிவு
அப்போது, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது என்எஸ்ஜி பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா, அவர்கள் மருத்துவமனைக்கு வராதது ஏன், என்எஸ்ஜி பாதுகாப்பை ஜெயலலிதாவிற்கு விலக்க சொன்னது யார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவர்களிடம் நீதிபதி எழுப்பினார். அப்போது அவர்கள், தங்களுக்கு எதுவும் தெரியாது, என்எஸ்ஜி பாதுகாப்பை விலக்கலாம் என்று நாங்கள் யாரும் தெரிவிக்கவில்லை.

எந்த தகவலும் இல்லை
உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தியிடம் தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து உளவுத்துறை ஐஜி சத்திய மூர்த்தியிடம் நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை நடத்தினார். அவர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் எந்த தகவலும் தனக்கு தெரிவிக்கவில்லை.

கடிதம் எழுத முடிவு
தானே அன்றைய தினம் இரவு 11.30 மணிக்கு தான் தகவல் கிடைத்து மருத்துவமனைக்கு சென்றதாகவும் என்எஸ்ஜி பாதுகாப்பு படை வீரர்கள் விலக்க வேண்டும் என்றால் தமிழக அரசு தான் மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அப்படியானால் என்எஸ்ஜியை விலக்க சொன்னது யார், என்எஸ்ஜி பாதுகாப்பு படை வீரர்கள் ஏன் மருத்துவமனைக்கு வரவில்லை என்பது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்க ஆணையம் முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து ஆணையம் சார்பில் உள்துறை அமைச்சகத்திற்கு விளக்கம் கேட்டு ஆணையம் சார்பில் கடிதம் எழுத முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications