ஆமா அந்த "சீனியும்- மகியும்" யாரா இருக்கும்?.. ரணகளத்திலும் மக்கள் மனதில் கலகல! #SRINIwedsMAHI
வருமான வரித் துறையினர் சசிகலா குடும்பத்தினரை சுற்றி வளைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட "சீனி- மகி" தம்பதி யார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
சென்னை: சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் ரெய்டு நடத்துவதற்காக அச்சடிக்கப்பட்ட சீனி- மகி என்ற பெயர் யாருடையதாக இருக்கும் என்ற கலகல கேள்வி மக்கள் மனதில் ஓடுகிறது.
சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நேற்று முதல் தொடர்ந்து நடைபெறுகிறது. ஜெயா டிவி, நமது எம்ஜிஆர், தினகரனின் பண்ணை வீடு, திவாகரனின் வீடு, விவேக் மற்றும் கிருஷ்ணப்பிரியா வீடு மற்றும் ஆதரவாளர்கள் வீடு என மொத்தம் 190 இடங்களில் ரெய்டு தொடங்கியது.
தற்போது 40 இடங்களில் ரெய்டு முடிந்துவிட்டது. மேலும் 150 இடங்களில் 2-ஆவது நாளாக விடிய விடிய ரெய்டு தொடர்கிறது.
சீனியும் மகியும் யாரோ
சசிகலா குடும்பத்தினரை ஒரே நேரத்தில் சுற்றி வளைப்பதற்காக 200 கார்களில் சீனி- மகி என்று திருமண கோஷ்டியினர் போல் ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு ரெய்டு நடத்த சென்றனர். சுமார் 1800 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
மக்கள் கேள்வி
இந்நிலையில் சீனியும் மகியும் யார் என்ற கேள்வி தற்போது மக்கள் மனதில் எழுந்துள்ளது. பொதுவாக காவல்துறை, வருமான வரித் துறை என எந்த ஆபரேஷனும் சம்பந்தப்பட்டவர்கள் பெயரில் தொடங்கப்படும். எனவே சீனியும் மகியும் சசிகலா குடும்பத்தினரை சேர்ந்தோரின் பெயர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
யார் பெயர்
இல்லாவிட்டால் வருமான வரித் துறையினருக்கு தொடர்புடையவர்களின் பெயரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எந்தவித தொடர்பும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக இந்த பெயரை அதிகாரிகள் பயன்படுத்தியது போல் தெரியவில்லை. எனவே இந்த பெயருக்கும், ரெய்டுக்கும் ஏதாவது தொடர்பிருக்கும் என்று கூறப்படுகிறது.
பாப்புலாரிட்டி
எது எப்படியோ உண்மையிலேயே இந்த பெயர் கொண்ட ஜோடி இனிமேல் திருமணம் செய்யவிருந்து அந்த காரில் சீனி- மகி என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் "இது அதுல்ல" என்ற பீதி பெரும் புள்ளிகளின் மனதில் எழும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல இனி சீனி- மகி என்ற பெயரில் நிஜமாகவே திருமணம் நடந்தாலும் அந்த ஜோடிக்கு ஓசியாக உலகப் புகழ் கிடைக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.