கீழடி அகழாய்வு தமிழக வரலாற்றின் ஒரு பகுதி... அமர்நாத்தே ஏன் தொடரக் கூடாது.. ஹைகோர்ட் கேள்வி
கீழடி அகழாய்வு பணிகளை, அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனே ஏன் தொடரக்கூடாது என தொல்லியல் துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மதுரை: கீழடி அகழாய்வு என்பது வரலாற்றின் ஒரு பகுதி. கீழடி அகழாய்வு சிறப்பாக நடக்க வேண்டும் என்பதில் நீதிமன்றத்திற்கும் அக்கறை உண்டு என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த வக்கீல் கனிமொழிமதி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்டம், கீழடியில் 3ம் கட்ட ஆய்வுகள் துவங்கும் நிலையில், கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாம் மாநிலத்திற்கு மாற்றினர். தற்போதுள்ள ஜோத்பூர் தொல்லியல் காப்பாளர் ஸ்ரீராமனுக்கு அகழாய்வு பணியில் போதிய அனுபவம் இல்லை.

பழமையான வரலாற்றை மறைக்கும் வகையிலேயே அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டுள்ளார். மாறுதல் உத்தரவை ரத்து செய்து, அவரே கீழடி அகழாய்வு பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன் செவ்வாய்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகி, முதலில் அகழாய்வு பணியை துவக்குவதற்கான உத்தரவு அமர்நாத் ராமகிருஷ்ணன் பெயரில்தான் வழங்கப்பட்டது. சட்டப்படி யார் பெயரில் அனுமதிக்கப்பட்டதோ, அவர்தான் அகழாய்வை தொடர முடியும் என்றார்.
தொல்லியல் துறை சார்பில், பணிமாறுதலை எதிர்த்து பெங்களூரு தீர்ப்பாயத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணன் முறையிட்டுள்ளார். தொல்லியல் துறை பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அகழாய்வு பணியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து நடக்கிறது. பணிமாறுதல் என்பது வழக்கமானதுதான் என கூறப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கீழடி அகழாய்வு என்பது வரலாற்றின் ஒரு பகுதி. கீழடி அகழாய்வு சிறப்பாக நடக்க வேண்டும். நல்ல அதிகாரி இருக்க வேண்டும் என்பதில் நீதிமன்றத்திற்கும் அக்கறை உண்டு. இது எல்லோருக்கும் உள்ள அக்கறை. ஏன் அவரே கீழடியில் பணியை தொடரக்கூடாது.
இதுகுறித்து தொல்லியல் துறையே நல்ல முடிவெடுக்கலாமே, எனக்கூறிய நீதிபதிகள், கீழடி அகழாய்வு தொடர்பான மற்றொரு மனுவுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிடுமாறு கூறி விசாரணையை ஆகஸ்ட் 17க்கு ஒத்திவைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications