திண்டுக்கல் எம்.எல்.ஏ. பாலபாரதிக்கு சீட் மறுக்கப்பட்டது ஏன்?
சென்னை: திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. கே.பாலபாரதிக்கு மீண்டும் சீட் தரப்படவில்லை. அவருக்குப் பதில் புதிய வேட்பாளரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று அறிவித்தது.
கே. பாலபாரதி தற்போதைய சட்டசபையில் மார்க்சிஸ்ட் கட்சியின் குழுத் தலைவராக இருக்கிறார். மாநிலக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளரகவும் பொறுப்பு வகிக்கிறார். இதுதவிர தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.
எழுத்தாளர், கவிஞர் என பன்முகம் கொண்ட பாலபாரதி, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேரந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
திண்டுக்கல்லின் முகமாக விளங்கும் பாலபாரதிக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சமீபத்தில் பேஸ்புக்கில் போட்ட ஒரு கருத்துதான் சீட் தர மறுத்ததற்கான காரணமா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
மக்கள நலக் கூட்டணி, தேமுதிகவுடன் கூட்டணி வைத்து அறிவிப்பு வெளியான நிலையில் இவரது பேஸ்புக்கில் நல்லதோர் வீணை செய்தே என்று பதிவிட்டிருந்தார். இது தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததை விமர்சித்து எழுதப்பட்ட பதிவு என்று சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து இந்தப் பதிவை அவர் உடனடியாக அகற்றி விட்டார். அது வேறு ஒரு நிகழ்வு தொடர்பானது என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இருப்பினும் தேமுதிகவுடன் சிபிஎம் உடன்பாடு வைத்ததை பாலபாரதி ஏற்கவில்லை என்றே பரபரப்பு கிளம்பியது. இந்த நிலையில்தான் அவருக்கு தற்போது திண்டுக்கல்லில் சீட் மறுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், கட்சி விதிப்படி ஒருவருக்கு 2 முறைக்கு மேல் வாய்ப்பு தரப்படாது என்று கூறப்படுகிறது. எனவேதான் அந்த அடிப்படையிலேயே பாலபாரதிக்கு மீண்டும் சீட் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.