ஜனாதிபதி வேட்பாளர் மனு தாக்கலுக்கு டிடிவி தினகரனை பாஜக ஏன் கூப்பிடலை தெரியுமா?
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு என்று டிடிவி தினகரன் தெளிவுபடுத்தாத காரணத்தினாலேயே வேட்புமனு தாக்கலுக்கு அவரை அழைக்கவில்லை என்று பாஜக கூறியுள்ளது.
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என்று டிடிவிதினகரன் தெளிவுபடுத்தாத காரணத்தால் வேட்புமனு தாக்கலுக்கு அவரை அழைக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் முரளிதர்ராவ் கூறியுள்ளார். மேலும் அதிமுகவில் தினகரன் பொறுப்பு குறித்தும் தெளிவாக கூறப்படவில்லை என்றும் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று தாக்கல் செய்கிறார். வேட்பாளரை ஆதரிக்கும் கூட்டணி கட்சித்தலைவர்கள் அனைவரும் முன்மொழிய உள்ளனர். பாஜக அழைப்பை ஏற்று தமிழகத்தில் இருந்து ஓபிஎஸ், ஈபிஎஸ் டெல்லி சென்றுள்ளன நிலையில் டிடிவி தினகரனுக்கு அழைப்பு எதுவும் வரவில்லை. இதற்கு காரணம் அவர் தனது ஆதரவு எம்எல்ஏக்களின் நிலைப்பாட்டை பற்றி வெளிப்படையாக தெரிவிக்காததே
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க கோரி பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதைத்தொடர்ந்து, பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக முதல்வர் அறிவித்தார். இதேபோல அமித்ஷா ஆதரவு கேட்டதால் தாங்கள் ஆதரவு அளிப்பதாக ஓபிஎஸ் அணியும் அறிவித்தது.
வேட்புமனு தாக்கல்
பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் மனுவை ஓட்டுப்போட தகுதியுள்ள எம்பி அல்லது எம்எல்ஏக்கள் 50 பேர் முன்மொழிய வேண்டும். அதேபோன்று 50 பேர் வழிமொழிய வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி பயணம்
பாஜக வேட்பாளரை ஆதரிக்கும் பாஜக எம்பி, எம்எல்ஏக்களுடன் கூட்டணி கட்சி தலைவர்களும் முன்மொழிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சில எம்பிக்கள் பாஜக வேட்பாளர் மனுவை முன்மொழிவார்கள் என்று தெரிகிறது. இதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து டெல்லி சென்றார்.
ஓபிஎஸ் பயணம்
பாஜக வேட்பாளர் ராம்நாத் வேட்புமனுவை முன்மொழிய, அதிமுக (புரட்சி தலைவி அம்மா) அணியின் சார்பில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதையேற்று நேற்று இரவு ஓபிஎஸ் மற்றும் மைத்ரேயன் எம்பி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். வேட்புமனு தாக்கலுக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததால் டெல்லி செல்வதாக ஓபிஎஸ் கூறினார்.
பிரதமருடன் பேச்சு
டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் 30 எம்எல்ஏக்களின் ஆதரவை கொண்டுள்ள டிடிவி தினகரன் தனது ஆதரவு யாருக்கு என்று வெளிப்படையாக கூறவில்லை.
அழைக்காதது ஏன்?
ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பாஜக வேட்பாளருக்கே வாக்களிக்க உள்ளனர். இதனையடுத்து வேட்புமனு தாக்கலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டிடிவி தினகரன் தனது ஆதரவு யாருக்கு என்று வெளிப்படையாக கூறாத காரணத்தினால்தான் அவரை அழைக்கவில்லை என்று பாஜகவின் முரளிதரராவ் கூறியுள்ளார்.
தன்னிச்சையான செயல்பாடு
அதிமுகவில் டிடிவி தினகரன் பொறுப்பு குறித்து தெளிவாக கூறப்படவில்லை. மேலும் டிடிவி தினகரன் தன்னிச்சையாக செயல்படுகிறார். இதன் காரணமாகவே அவரை வேட்புமனு தாக்கலுக்கு அழைக்கவில்லை என்று கூறினார் முரளிதரராவ்.
முதல்வர் தெளிவுபடுத்துவாரா?
ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுத்த பாஜக தினகரனுக்கு அழைப்பு விடுக்காதது அவரது ஆதரவாளர்களிடையே ஒருவித சோர்வினை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவிற்கு ஆதரவு என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தது தன்னிச்சையான முடிவா? அல்லது பொதுச்செயலாளர் கூறி அறிவித்தாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கத்தமிழ் செல்வன்.