அதிமுகவுக்கு எந்தத் தொகுதியிலாவது டெபாசிட் கிடைக்குமா??
சென்னை: ஒரு தொகுதியில் கூட அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது என்று டிடிவி தினகரன் போகும் இடமெல்லாம் சொல்லி வருகிறார். அதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது??
உண்மையில் அதிமுக என்றால் என்ன என்ற அடிப்படையைப் பார்த்தால்தான், புரிந்து கொண்டால்தான் இந்த கேள்விக்கான சரியான விடையைக் கண்டறிய முடியும்.
எம்ஜிஆர், ஜெயலலிதா இந்த இரண்டு முகங்கள்தான் அதிமுக என்பதே பலருக்கும் தெரிந்த வெளிச்சம். இவர்கள்தான் அதிமுகவை வழிநடத்திய தலைவர்கள் என்பதுதான் அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் அதிமுகவின் மறுபக்கம் போய்ப் பார்த்தால் அங்கு பெரிய "டிபார்ட்மென்டல் ஸ்டோரே" மறைந்திருப்பதை அறியலாம்.. அதன் உரிமையாளர் சாட்சாத் சசிகலாதான்!
[முருகா.. திருப்பரங்குன்றத்தை யாருக்குப்பா தரப் போற?? ]
அதிமுகவின் நிஜம் இதுதான்
எம்ஜிஆர் காலம் வேறு. ஆனால் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை எடுத்துக் கொண்டோம் என்றால், அவர் சுயமாக செயல்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்பது அவரது மறைவுக்குப் பிறகு அம்பலமாகி விட்டது. அதாவது ஜெயலலிதா என்ற பிம்பமே Expose ஆகிப் போய் விட்டது. உண்மையான அதிமுக சசிகலாதான் என்பதை அதிமுகவினரே அப்போதுதான் அறிந்தனர்.
இவரே எல்லாம்
ஜெயலலிதாவின் செயல்பாடுகளில் 80 சதவீதம் சசிகலாவின் முடிவுகளாகத்தான் இருந்திருக்கிறது என்பதே உண்மை. திட்டமிடல் உள்பட அத்தனை வேலைகளையும் பார்த்தவர் சசிகலாவும், அவர் ஆணையிட்ட அவரது குடும்பத்தாரும்தான். இன்னும் சொல்லப் போவதானால், நடராஜ இங்கு முக்கியமான மூளைக்காரராக செயல்பட்டுள்ளார். முடிவு வேண்டுமானால் ஜெயலலிதா எடுத்ததாக இருக்கலாம். ஆனால் அவர் எப்படி முடிவெடுப்பார் என்பதை ஊகித்து அதற்கேற்ப காய் நகர்த்திய திறமைசாலிகள் சசிகலாவும், அவரது குடும்பத்தாரும்.
ஒரிஜினல் நிர்வாகிகள்
ஜெயலலிதா என்ற பிம்பம் விஸ்வரூபம் எடுத்து அதிமுகவில் வியாபித்திருந்தாலும் கூட ஒரிஜினல் "நிர்வாகிகள், மேனேஜர்"கள் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும்தான். சசிகலா குடும்பத்தினர் ஒவ்வொருவரும் அதிமுகவின் வெற்றி, அதிமுகவின் இருப்புக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளனர் (அது கசப்பான உண்மையாக இருந்தாலும்). ஜெயலலிதாவால் திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய முடிந்ததற்கு இந்தக் குடும்பமும் ஒரு முக்கியக் காரணம்.
தலைவர்கள், தொண்டர்கள்
அடிமட்டத் தொண்டர்களின் மனதை அறிந்து அதை ஜெயலலிதாவிடம் கொண்டு செல்வது, யார் யாருக்குப் பதவி தருவது, யாருக்கு தேர்தலில் சீட் தருவது, யாரைத் தூக்குவது, யாரை சேர்ப்பது, எந்த ஜோசியக்காரரிடம் குறி கேட்பது என பெரும்பாலான யோசனைகளை ஜெயலலிதாவுக்குக் கொடுத்ததில் சசசிகலாவின் பங்கு மிக முக்கியமானது. அந்த வகையில் அதிமுகவின் வெற்றிக்கு முக்கியக் காரணம், இரட்டை இலை, ஜெயலலிதா ஆகியவற்றோடு சசிகலாவின் ராஜதந்திர செயல்பாடுகளும் என்பதை மறுக்க முடியாது.
அதிமுகவின் உண்மை நிலை
ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவை தனது விரல் நுனியில் கட்டுப்படுத்தி வைத்திருந்தார் சசிகலா. இன்னொரு ஜெயலலிதா என்ற வேடத்தையும் அவர் பகிரங்கமாகவே தரித்தார். ஒட்டுமொத்த அதிமுகவும் சசிசகலா பின்னால் திரண்டது. ஆனால் இன்றைய நிலவரம் அனைவரும் அறிந்ததே. ஒற்றைத் தலைமையின் கீழ் இன்று அதிமுக இல்லை. கட்சியின் அடிமட்டத் தொண்டர் ஆதரவு தினகரனுக்கே உள்ளதாக பலமாக நம்பப்படுகிறது. பாஜகவின் கட்டுப்பாட்டின் கீழ் அதிமுக இருப்பதாகவும் ஒரு பலமான குற்றச்சாட்டு உள்ளது. இதை விட முக்கியமாக தினகரன் போன்ற சரியான திட்டமிடல் தலைவர்கள் அதிமுகவில் இல்லை. சசிகலா போன்ற ராஜதந்திரிகள் அதிமுகவில் இல்லை.
ஆர்.கே.நகர் உணர்த்தியது
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் தரப்பு இதைத்தான் அதிமுகவுக்கு உணர்த்தியது. உண்மையான அதிமுக தான் தான் என்பதை அந்த தேர்தலில் தினகரன் உணர்த்தினார். தினகரனுடன் அதிமுக இணைந்தால்தான் அது பலமானதாக இருக்க முடியும் என்பதையும் அவர் காட்டினார். உண்மையும் அதுதான்.. தினகரனுடன், அதிமுக இணைந்து தேர்தலை எதிர்கொண்டால், அது திமுக கூட்டணிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. காரணம், திட்டமிடலில் சசிகலா, ஸ்டாலினை விட கில்லாடி தினகரன்.
அதிமுக படு வீக்
எதார்த்தமாக பார்த்தோமானால் அதிமுகவின் நிலை படு வீக் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. ஆள், அம்பு எல்லாம் இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது. பாஜகவின் கடைக்கண் பார்வை இருக்கிறது. எனவே பலமாக இருப்பது போல தோற்றம் இருக்கலாம். ஆனால் பேஸ்மேன்ட் வீக், பில்டிங் ஸ்டிராங் கதைதான் அதிமுகவினுடையது. அந்த வகையில் அதிமுக டெபாசிட் கூட வாங்காது என்று தினகரன் கூறி வருவது முக்கியமானது, கவனத்தில் கொள்ள வேண்டியது, முற்றிலும் புறக்கணிக்க முடியாதது. மாறாக, தினகரன், சசிகலாவுடன் அதிமுக கை கோர்த்தால்.. நிச்சயம் அது பெரும் தாக்கத்தை வரும் தேர்தல்களில் ஏற்படுத்தும் என்பதையும் மறுக்க முடியாது.