பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுமோ: கலக்கத்தில் அதிமுக வேட்பாளர்கள்
சென்னை: வேட்பாளர் மாற்றம் குறித்த தகவல்கள் அலையடித்து வருவதால் அதிமுக வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா. அந்த வேட்பாளர் பட்டியலில் அதிமுக முன்னணி அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும், பத்திரிக்கையாளர்களும், அரசியல் விமர்சர்களும் கணிக்க முடியாத அளவு வேட்பாளர்கள் பெயர் இருந்தது.
இதில் கரூர் தம்பிதுரை, திருச்சி ப.குமார் உள்ளிட் மூன்று பேர் மட்டுமே பழைய முகம். மேலும் பி.ஆர்.சுந்தரம் உள்ளிட்ட சில முன்னாள் எம்.எல்.ஏ.களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதிக அளவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் முதலில் பட்டியல் வெளியான உடனே அளவிட முடியாத மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் அடுத்த நாள் முதலே பலரும் சோகத்தில் உள்ளனர். காரணம், புதிய வேட்பாளர்கள் குறித்த சாதக பாதக விஷயங்களை அந்தந்த தொகுதி நிர்வாகிகள் சிலர் போயஸ் கார்டனுக்கு புகாராக தட்டிவிடுவதுதானாம். இதனால் எங்கே தனது பெயர் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடுமோ என பலரும் அச்சப்படுகின்றார்களாம்.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மதுரை, நாகை, கோவை, தென்காசி, திருப்பூர், வட சென்னை என தொகுதிகளை குறிவைத்துள்ளதால் அந்த தொகுதி வேட்பாளர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
இப்போது முதலே தாம் தூம் என செலவு செய்துவிட்டால், பின்பு வருதப்பட நேரிடுமே என கருதி செலவுகளை அடக்கியே வாசிக்கின்றார்களாம்.
அதிமுகவை பொறுத்தவரை வேட்பாளர்கள் மீது குற்றம் குறைகள் ஆதாரப்பூர்வமாக முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு வந்தால், அவர்கள் யாராக இருந்தாலும், அவர் பார்வையில் இருந்து தப்ப முடியாது என்பது நிஜம்.
எனவே, வேட்பாளர் வாபஸ் நாள் 4 மணி வரை யார் களத்தில் நிற்கின்றார்களோ அவர்கள் தான் அதிமுக இறுதி வேட்பாளர்களாக கருத வேண்டி உள்ளது.