விழுப்புரத்தில் தறி நெய்து கொண்டே குறைகளை கேட்டறிந்த ஸ்டாலின்
விழுப்புரம்: நமக்கு நாமே பயணத்தில் தான் பேண்ட், சட்டை அணிந்துள்ளதன் காரணத்தை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நமக்கு நாமே பயணம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் சென்று நெசவாளர் ஒருவரின் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த தறியை நெய்த அவர் பின்னர் பேருந்து நிலையத்திற்கு சென்றார். பேருந்து நிலையத்தில் வேனில் இருந்தபடி உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
சட்டம் ஒழுங்கு
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு. துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துள்ளார். காவல் துறை முதல்வரின் பொறுப்பில் இருந்தும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை.
விலைவாசி
விஷமாய் ஏறும் விலைவாசியை அதிமுக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. எங்கள் ஆட்சியில் ரேஷன் கடைகளில் மாதம் முழுவதும் பொருட்கள் கிடைத்தது. ஆனால் தற்போது அப்படி இல்லையே. இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் தேர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார் ஸ்டாலின்.
கோரிக்கை
கண்டாச்சிபுரத்தில் இருந்து கிளம்பிய அவர் மழவந்தாங்கல், தேவதானம்பேட்டை, ஆலம்பூண்டி வழியாக செஞ்சியை மாலை 6 மணி அளவில் அடைந்தார். செஞ்சியில் மக்களை சந்தித்தபோது அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றார். அங்கிருந்து அவர் பேர்விளாகம், நாட்டார்மங்கலம், வல்லம் வழியாக திண்டிவனம் சென்றார். திண்டிவனத்தில் வர்த்தகர்களை சந்தித்து பேசினார்.
ஆசிரியர்கள்
திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் இருக்கும் மண்டபத்தில் கூடியிருந்த ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், விவசாயிகள் சங்கத்தினரை சந்தித்து பேசினார் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் முடக்கப்பட்டுவிட்டதாகவும், ஆசிரியர்களுக்கு இந்த ஆட்சியில் நல்ல திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை என்றும், விவசாயிகளுக்கு முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஸ்டாலினிடம் புகார் தெரிவித்தனர்.
ஸ்டாலின்
திமுக ஆட்சியில் பாரபட்சம் இன்றி அனைவருக்கும் வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகை இந்த ஆட்சியில் 60 சதவீதம் பேருக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து நான் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அனைவரும் பயன் பெறுவார்கள். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும் என்றார் ஸ்டாலின்.
எரிச்சல்
கூட்டேரிப்பட்டில் வேனில் இருந்தபடியே ஸ்டாலின் பேசுகையில், நான் பல முறை விழுப்புரம் வந்துள்ளேன். என் பயணத்தை பார்த்துவிட்டு உதிரி கட்சிகளுக்கு பயங்கர எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. மாற்றம், முன்னேறம் என பேசிக் கொண்டு நான் தான் அடுத்த முதல்வர் என்பவர்களுக்கு என் பயணத்தை பார்த்து எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
ஊழல்
ஊழலை ஒழிப்போம் என்று கூறும் அவர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகும் அளவுக்கு அவர் மீது ஊழல் வழக்கு உள்ளது. அப்படி இருக்கையில் ஊழல் பற்றி பேச அவருக்கு தகுதி இருக்கிறதா?
பேண்ட், சட்டை
நான் நடிக்கிறேன், பேண்ட், சட்டை அணிகிறேன் என்கிறார். இன்று அல்ல நேற்று அல்ல இளைஞர் அணி துவங்கியதில் இருந்து நான் பேண்ட், சட்டை அணிகிறேன்.
ஜெயலலிதா
ஜெயலலிதா மக்களை சந்திக்கப் போவதாக கூறப்படுகிறது. அவர் எப்பொழுதாவது விழுப்புரம் மாவட்ட மக்களின் குறைகளை கேட்டது உண்டா? நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை சந்திக்கிறோம். ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் தான் மக்களை சந்திக்க ஹெலிகாப்டரில் பறந்து வருவார்.
கொடநாடு
ஜெயலலிதாவை சந்திக்க அரசு அதிகாரிகள் கொடநாட்டுக்கு செல்ல எவ்வளவு செலவாகிறது. அது எல்லாம் யார் பணம். மக்களின் பணம். கலைஞர் கட்டிய புதிய தலைமைச் செயலகத்திற்கு செல்ல செலவாகிறது என்றாரே தற்போது சென்னையில் இருந்து 550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொடநாட்டுக்கு செல்ல எவ்வளவு செலவாகும்.
வாக்குறுதி
தேர்தல் நேரத்தில் வந்து பொய்யான பல வாக்குறுதிகளை ஜெயலலிதா அளிப்பார். கடந்த தேர்தல் நேரத்திலும் சரி, சட்டசபையில் 110 விதியின் கீழும் சரி பல அறிவிப்புகளை வெளியிட்டாரே, எதையாவது செயல்படுத்தினாரா?
விவசாயிகள்
விவசாயிகளுக்கு கருணாநிதி இலவசமாக மின்சாரம் வழங்கினார், கடன்களை தள்ளுபடி செய்தார். அதிமுக ஆட்சியில் தொல்லைகளை தாங்க முடியாமல் 68 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு எல்லாம் முடிவு கட்ட மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என்றார் ஸ்டாலின்.