அதிமுகவை குறி வைக்கும் ரஜினி, கமல் அரசியல்... கோதாவில் இறங்கிய கவுதமி!
அரசியல் களத்திற்கு வந்துள்ள முன்னணி நடிகர்களான ரஜினியும், கமல்ஹாசனும் அதிமுகவை குறிவைத்தே காய்களை நகர்த்தி வரும் நிலையில் கவுதமியின் திடீர் ஜெயலலிதா சமாதி விசிட் ஏன்?
Recommended Video
சென்னை : அரசியல் களத்திற்கு வந்துள்ள முன்னணி நடிகர்களான ரஜினியும், கமல்ஹாசனும் அதிமுகவை குறிவைத்தே காய்களை நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில் கவுதமி இன்று திடீரென ஜெயலலிதா சமாதி விசிட் ஏன்?. மகளிர் தினத்திற்கு ஜெயலலிதா உயிருடன் இருந்த காலகட்டத்திலேயே அவருக்கு வாழ்த்து சொல்லாத கவுதமி இன்று சமாதிக்கு சென்றது விந்தையாக இருக்கிறது.
தமிழக அரசியல்களம் நடிகர்களின் அரசியல் களமாக மாறிக்கொண்டே வருகிறது. கமல்ஹாசன் பிப்ரவரி 21ல் அரசியல் கட்சி தொடங்கிய சூட்டோடு தனது கட்சி அதிமுகவிற்கு எதிரானது என்ற அறிவித்துக் கொண்டார். ஜெயலலிதா மீதான வெறுப்பு காரணமாகவே அவர் இவ்வாறு கூறுகிறார் இதற்கான பதிலை மக்கள் கமலுக்கு தருவார்கள் என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
கமல் அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கி அதற்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். ஆனால் 3 வருஷம் கழித்து தான் அரசியல் கட்சி என்று சொல்லிவிட்டு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் எம்ஜிஆர் ஆட்சியைத் தருவேன் என்று அதிமுகவை காலி செய்யும் விதமாக நடிகர் ரஜினிகாந்த்தும் பேசி வருகிறார்.
நல்ல தலைவனுக்கு வெற்றிடம்
அதுமட்டுமில்லை தமிழகத்தில் நல்ல தலைவனுக்கான வெற்றிடம் இருக்கிறது. அதனை நிரப்பவே நான் அரசியலுக்கு வருகிறேன் என்றும் ரஜினிகாந்த் கூறுகிறார். ஒரு பக்கம் கமல் மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார், மற்றொரு பக்கம் ரஜினிகாந்த் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்கிறார்.
கவுதமியின் அரசியல்
ரஜினி, கமல் அரசியல் குறித்து தொடக்கத்தில் ஆதரவு தெரிவித்த கவுதமியும் தற்போது சற்று தடம் மாறுகிறாரோ என்று தோன்றுகிறது. நடிகர் கமல்ஹாசனுடனான 13 வருட நட்பை முறித்துக் கொண்டு வெளியேறிய கவுதமி, பாஜகவுடன் நெருக்கம் காட்டினார். இதனால் விரைவில் கவுதமி பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சொல்லப்போனால் கவுதமி ஆர்கே நகர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றெல்லாம் கூட பேச்சுகள் அடிபட்டன.
சம்பள பாக்கி புகார் சொன்ன கவுதமி
ஆனால் இதுவரை எந்த கட்சியிலும் சேராமல் இருக்கிறார் கவுதமி. கமல் கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே தனக்கு கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் சம்பள பாக்கி வைத்திருப்பதாக குண்டை வீசினார். இதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன, என்னுடைய தேவைகளுக்கு நான் உழைத்ததற்கான சம்பளம் தேவை என்றும் கவுதமி கூறினார்.
ஏன் திடீர் விசிட்?
கமல் அதிமுகவை எதிர்க்கும் நிலையில் கவுதமி இன்று சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா சமாதியில் திடீரென விசிட் அடித்துள்ளார்.மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் ஜெயலலிதா சமாதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் ஒரு ஆண்டும் மகளிர் தினத்திற்கு வாழ்த்து கூறியது இல்லை. ஒரு வேளை அரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினியும், கமலும் மாறி மாறி கூறும் நிலையில் இவர்கள் தொல்லை தாங்க முடியாமல் கவுதமியும் ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் இருக்கப் போனோரோ?