அதிமுக ஐடியில் இருந்து அஸ்பயர் சாமிநாதன் டெலிட் ஆன பின்னணி
சென்னை: மாணவரணி, மருத்துவரணி, வக்கீல்கள் அணி இருப்பது போல தகவல் தொழில் நுட்பப்பிரிவுக்கு என்று ஒரு அணியை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் அதிமுகவின் 5 ஆண்டுகால சாதனை புகழ் பரப்பியது அதிமுக.
இந்த ஐ.டி அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த அஸ்பயர் சாமிநாதனை பதவியில் இருந்து நீக்கி விட்டு அந்த பதவியில் ராமச்சந்திரன் என்பவரை நியமனம் செய்துள்ளார் ஜெயலலிதா.
அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ள ராமச்சந்திரன், சிங்கநால்லூர் தொகுதியைச் சேர்ந்தவர். 1991- 96ம் ஆண்டு சிங்கநல்லூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏவாக பதவி வகித்த சிங்கை கோவிந்தராசுவின் மகன்தான் இந்த ஜி.ராமச்சந்திரன். இவர் அகமதாபாத் ஐஐஎம்மில் படித்தவராம்.
அஸ்பயர் சாமிநாதன் நீக்கத்திற்கு காரணமாக அதிமுக வட்டாரங்களில் பல காரணங்கள் கிசுகிசுக்கப்படுகின்றன. முக்கியமாக அஸ்பயர் சாமிநாதன் ஓபிஎஸ் ஆதரவாளர் என்பதுதான்.
அக்கவுண்ட் இல்லாத ஐ.டி விங் செயலாளர்கள்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிமுகவின் ஐ.டி.பிரிவுக்கு அமைப்பு ரீதியான 50 மாவட்டங்களுக்கும் செயலாளர்களை நியமித்து ஜெயலலிதா அறிவிப்பை வெளியிட்டார். அதிமுகவின் ஐ.டி. விங்கில் புதிதாக போடப்பட்டிருக்கும் பல மாவட்டச் செயலாளர்களுக்கு ஃபேஸ்-புக் அக்கவுண்ட்டே கிடையாது என்று அப்போதே புகார் எழுந்தது.
பத்தாப்பு பாஸ்... எட்டாப்பு ஃபெயில்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களுடனும், ஓரங்கட்டப்பட்ட அமைச்சர்களின் துணையுடனும், ஐ.டி. விங்கிற்கு எட்டாவது பெயில் ஆகிப் போனவர்களைக் கூட மாவட்டச் செயலாளர்களாக அஸ்பயர் சாமிநாதன் போஸ்டிங் போட்டார் என்று புகார் எழுந்தது.
இந் நிலையில் நேற்று மாலையில் அஸ்பயர் சாமிநாதனின் பதவி பறிக்கப்பட்டு, அந்த இடத்துக்கு ஜி.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அசைன்மெண்ட் செய்யாத அஸ்பயர்
ஜெயலலிதாவால் அஸ்பயர் சாமிநாதனுக்கு கொடுக்கப்பட்டிருந்த அசைன்மெண்ட், டுவிட்டர், ஃபேஸ்புக்கில் பாப்புலரான அதிமுகவினரை தேர்வு செய்து பட்டியல் தயார் செய்வது. ஆனால் இவரோ, அதை செய்யாமல் மாவட்ட செயலாளர்களின் பி.ஏக்களிடம் தொடர்பு கொண்டு பரவலாக சில பெயர்களை கேட்டு அதனை பட்டியலாக தயாரித்து கார்டனில் சமர்பித்தாராம்.
நேர்காணலில் சொதப்பல்
அதன் அடிப்படையில் போயஸ் கார்டனில் இருந்து பட்டியலில் உள்ளவர்களுக்கு நேர்காணலில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்படி நேர்காணலுக்கு வந்தவர்களிடம் நடத்தப்பட்ட இன்டர்வியூ அதிமுக தலைமைக்கு பெரும் டென்சனைத் தந்ததாம். காரணம், இவர்களுக்கு கட்சி பற்றி ஏதும் தெரியாதது தான்.
தூக்கி எறிந்த ஜெ
இதனால் அப்செட் ஆன ஜெயலலிதா, தவறான நபர்களின் பட்டியலை தயாரித்துக் கொடுத்த அஸ்பயர் சாமிநாதனை அப்பதவியில் இருந்து தூக்கியெறிந்துள்ளார் என கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.