அரசு, காவல்துறை நடவடிக்கையில் முரண்பாடுகள்.. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடரும் மர்மம்!
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கலவரத்தில் ஈடுபட்டதாக 10,000 பேருக்கு மேற்பட்ட மக்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.
இவ்வளவு அதிக மக்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டிய தேவை என்ன என்பது பற்றிய கேள்வி எழுகிறது.
துப்பாக்கி சூடு மூலம் 13 மக்களை போலீசார் கொன்ற 3 நாட்கள் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது போலீசார் தற்காப்புக்காக சுட்டிருப்பார்கள் எனவும், இதற்கான ஆர்டரை யாரும் பிறப்பிக்கவில்லை என்றும் கூறினார்.
முதல்வருக்கு தெரியாதாம்
தூத்துக்குடி போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரில் கண்ணன், சேகர் ஆகிய, இரு துணை வட்டாட்சியர்கள் (துணை தாசில்தார்கள்) சூட்டிங் ஆர்டர் பிறப்பித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. துணை தாசில்தார் உத்தரவின்பேரில் போலீசார் சுட்டதாக வழக்குப்பதிவில் குறிப்பிட்டுள்ள நிலையில், துப்பாக்கி சூடு நடந்த 3 நாட்களுக்கு பிறகு பேட்டியளித்த முதல்வருக்கு அது தெரியாமல் போனது ஏன் என்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமூக விரோதிகள்
இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம், 10,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை நடவடிக்கைதான். ஏனெனில், போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாகவும் எனவே, துப்பாக்கி சூடுவரை சென்றதாகவும், பேட்டியளித்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் 10,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்படியானால், இவ்வளவு பேரும் முதல்வர் வார்த்தை அடிப்படையில் கூற வேண்டுமானால், சமூக விரோதிகளா என்ற கேள்வி எழுகிறது.
உளவுத்துறைக்கு தெரியாதா?
10,000 சமூக விரோதிகள் ஒரு நகருக்குள் போராட்டத்தில் பங்கேற்றிருந்தால் அதை முன்கூட்டியே கண்டறிய திறமைமிக்க தமிழக உளவுத்துறையால் ஏன் முடியவில்லை? அப்படி கண்டுபிடிக்க தவறியிருந்தால் இது எவ்வளவு பெரிய விஷயம்? தமிழகத்தின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கிவிடாதா? இது அரசின் ஒட்டுமொத்த தோல்வியாக அல்லவா பார்க்கப்படும்?
அப்பாவிகளுக்கு நிதி உதவி
ஒருவேளை இந்த 10,000 பேரும், சமூக விரோதிகளால் தூண்டப்பட்ட அப்பாவிகள் என்று அரசு வாதிடுமானால் அதுவும் மோசம். இத்தனை பேருக்கு 'சமூக விரோதிகள்' மூளைச் சலவை செய்யும் வரை காவல்துறை, உளவுத்துறையால் ஏன் கண்டறிய முடியவில்லை என்ற கேள்வியும் அடுத்ததாக வரும். சமூக விரோதிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அரசால் இப்போது கூற முடியாது. போலீஸ் துப்பாக்கி சூட்டுக்கு, இறந்த 13 பேருமே அப்பாவிகள் என்பதை கண்டறிந்துதானே, அவர்கள் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம், உதவித் தொகை அறிவித்துள்ளது அரசு. அப்படியானால், அப்பாவிகளை சுட்டு கொன்ற மற்றும் சுட்டு கொலை செய்யய உத்தரவிட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லையே ஏன்?
முரண்பாடுகள்
மொத்தத்தில், தூத்துக்குடி சம்பவத்தில் துப்பாக்கி சூடுக்கு முன்பும், அதன் பிறகும் பெரும் குழப்பத்தோடேயே எதிர்கொண்டுள்ளது அரசு என்பது பேட்டிகள், நடவடிக்கைகளில் உள்ள முரண்பாடுகள் மூலம் மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. சட்டசபை கூடும் ஒருநாளைக்கு முன்பாக ஆலையை மூடிவிட்டோம் என அரசு அறிவித்துவிட்டதாலேயே, இந்த கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டது என கூறிவிட முடியாது.