8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது வன்முறையின் உச்சம் இல்லையா மிஸ்டர் ரஜினிகாந்த்?
Recommended Video
சென்னை: கலவரத்தின் உச்சம் சீருடை அணிந்த போலீசார் மீது தாக்குதல் நடத்துவதுதான் என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் 8 பேரை போலீசார் சுட்டுக் கொன்ற நிலையில் அமைதி காக்கிறார்.
தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு சீர்கேடு ஏற்படுகிறது என்று பொதுமக்கள் குமுறி வருகிறார்கள். தொழிற்சாலை அருகேயுள்ள கிராம மக்களுக்கு பல்வேறு வகையான நோ் தாக்கம் ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகளை, மேற்கொள்ள ஆலை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து 100 நாட்கள் முன்பாக பெரும் போராட்டத்தை ஆரம்பித்தனர் தூத்துக்குடி மக்கள்.
போலீசார் தடுப்பு
இப்போராட்டம் 100வது நாளை எட்டியுள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை செய்ய விடமாட்டோம் என அரசு தரப்பில் இருந்து, உறுதியான உத்தரவாதம் வரவில்லை. இதனால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி இன்று மக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.
போலீஸ் துப்பாக்கி சூடு
இருப்பினும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் முன்னேறினர். ஆனால், அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். கலவரம் கட்டுக்கடங்காமல் போனால், முட்டிக்கு கீழ்தான் சுடலாம் என்று அனுமதியளிக்கப்பட்ட நிலையில், நெஞ்சிலும், உடலின் மேல் பகுதிகளிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தலைவர்கள் கண்டனம்
இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். முன்னதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றோரும், கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ஆனால், ஐபிஎல் போராட்டத்தின்போது போலீஸ்காரர் ஒருவர் தாக்கப்பட்டது குறித்து கடும் கண்டனத்தை பதிவு செய்த ரஜினிகாந்த் மட்டும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. சீருடையில் உள்ள போலீஸ்காரர் தாக்கப்பட்டது வன்முறையின் உச்சம் என வர்ணித்திருந்தார் ரஜினி.
ரீல் வேறு ரியல் வேறு
ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளிவர உள்ள காலா திரைப்படத்தின் பாடல் வரிகளை கேட்டால் புரட்சி பொங்கும், நரம்புகள் வெடிக்கும். இது அவரது அரசியல் பயணத்திற்கு உதவும் என ரசிகர்கள் புளகாங்கிதம் ஒருபக்கம் அடைந்துவரும் நிலையில், மறுபக்கம் மக்களின் வாழ்வாதார போராட்டத்தின்போது துப்பாக்கியால் சுட்டு 8 பேர் கொலை செய்யப்பட்டது குறித்து ரஜினிகாந்த் கருத்து கூறாதது, பெரும் முரண். "அடங்கி வாழ்ந்தாக்க முடியாதம்மா, உரிமையை வாங்காம உயிர் போகுமா, எழுந்து வாடா, வாடா, எதிர்த்து நீ கேளுடா, பயந்தா ஆகாதுடா, இனமே உன் கூடடா" என்ற பாடல் வரிக்கு உணர்ச்சி பொங்க நடித்துவிட்டு, உரிமையை வாங்க, போய் உயிரை பறி கொடுத்த மூன்று பேர் பற்றி மூச்சு விடாமல் ரஜினி உட்கார்ந்திருக்கிறார்.
கருத்து இல்லையே
போலீஸ்காரர் தாக்கப்பட்டதற்கு சற்றும் குறைவில்லாதது, 8 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. செலக்டிவாக கருத்து கூறிவருவதை வாடிக்கையாக வைத்துள்ள ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் விவகாரத்திலும் சும்மா இருக்கிறார். ஸ்டெர்லைட் பிரச்சினை பெரிதானபோது, தீர்வு காண வேண்டும் என டுவிட் போட்ட ரஜினிகாந்த், பொதுமக்கள் சுட்டு கொலை செய்யப்படுவதை பார்த்த பிறகும், சும்மா இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.