திமுகவுடனான கூட்டணி செய்திகளை திடீரென மறுத்த தேமுதிக! பின்னணியில் பரபரப்பு தகவல்கள்
சென்னை: திமுக-தேமுதிக கூட்டணி ஏற்பட்டுவிட்டதாக வெளியான செய்திகளுக்கு திடீரென தேமுதிக மறுப்பு தெரிவித்துள்ளதன் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான, பிரகாஷ் ஜவடேகர் கடந்த 28ம் தேதி சென்னையில், விஜயகாந்தை சந்தித்து கூட்டணி பற்றி பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஆனால், இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றுகூறி, பாஜகவுக்கு செக் வைத்தது தேமுதிக.
அதேநேரம், தமிழக பாஜக தலைவர் தமிழிசையோ, தேமுதிகவுடன் கூட்டணி குறித்து தொடர்ந்து பேசி வருவதாக தெரிவித்தார்.
ம.ந.கூ எதிர்பார்ப்பு
இன்னொரு பக்கம், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களும் கடந்த மாதம் விஜயகாந்தை சந்தித்துப் பேசினர். விஜயகாந்த் எப்படியும் மக்கள் நல கூட்டணியில்தான் இணைவார் என்று வைகோ தினமும் ஒருமுறையாவது செய்தியாளர்களிடம் கூறிவருகிறார்.
கூட்டணி செய்தி
ஜவடேக்கர், சென்னையில், விஜயகாந்த்தை சந்தித்துவிட்டு போன ஒரு சில நாட்களில், சமூக வலைத்தளங்களில், ஒரு தகவல் தீயாய் பரவியது. அதாவது, திமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும், தேமுதிகவுக்கு 59 தொகுதிகள் தர திமுக சம்மதித்துள்ளது என்றும் அந்த தகவல் கூறியது.
கண்டுகொள்ளவில்லை
ஆனால், இதுபற்றி, தேமுதிகவோ, திமுகவோ கருத்து எதையும் கூறவில்லை. அமைதி காத்து வந்தன. இதனால், சந்தேகம் உறுதியாகிவிட்டதாக மக்கள் மனதுக்கு தோன்றியது.
திடீரென மறுப்பு
ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, ‘கூட்டணி பற்றி யாருடனும் பேசவில்லை. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 59 தொகுதி என்பதெல்லாம் வெறும் வதந்தி ' என்று தேமுதிக தரப்பில் திடீரென அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் விஜயகாந்த் பெயரில் இல்லாமல் கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டது.
திமுகவும் மறுப்பு
தேமுதிகவிடமிருந்து அறிக்கை வந்த பிறகு, பேட்டியளித்த திமுகவின், கனிமொழியும், சந்திரகுமார் கூறியது உண்மைதான். கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்று தெரிவித்து, சர்ப்ரைஸ் கொடுத்தார்.
சில, பல காரணங்கள்
இப்படி, தேமுதிக திடீரென மறுப்பு அறிக்கை வெளியிட்டதன் பின்னணியில் திடீர் மாற்றங்கள் பல நிகழ்ந்தது காரணம் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரேமலதா தடைக்கல்
இதுகுறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறியது: திமுகவுடனான கூட்டணியை தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்களில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால், பிரேமலதாவுக்குதான் அதில் துளியும் விருப்பமில்லை. அவரது நடவடிக்கைகள் பாஜக கூட்டணியை நோக்கியே உள்ளன.
திராவிட கட்சிகளுக்கு மாற்று
பிரேமலதா தொடர்ச்சியாக, அதிமுகவையும், திமுகவையும், பிரச்சார மேடைகளில் வறுத்தெடுத்து வந்துள்ளார். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, தேமுதிகவை நிலைநிறுத்த முயலுகிறார். இப்படியிருக்கும்போது திமுகவோடு செல்வது கேலி, கிண்டலுக்கு உள்ளாகிவிடும் என்று பிரேமலதா பயப்படுகிறார்.
விஜயகாந்த் ஆலோசனை
இதையறிந்ததும், தேமுதிக முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் காலை விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். கட்சி தொடங்கிய முதலாவது ஆண்டில் தேமுதிக சந்தித்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து நின்றே 8.4 சதவீத வாக்குகளை பெற்றதை விஜயகாந்த் அப்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்கு சதவீதம் சரிவு
2009 மக்களவைத் தேர்தலில் தனித்து நின்றபோது 10.3 சதவீதமாக வாக்கு வங்கி உயர்ந்தததையும் சுட்டிக்காட்டிய விஜயகாந்த், அதிமுக கூட்டணியில் இணைந்து கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது, கருணாநிதி எதிர்ப்பு அலை இருந்தபோதும்கூட, 41 இடங்களில் போட்டியிட்டு தேமுதிக 29 இடங்களில்தான் வென்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மளமள சரிவு
அதிமுக கூட்டணியை விட்டு பிரிந்தபோதிலும் கூட, கடந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக வாக்கு வங்கி 5.9 சதவீதமாக மளமளவென குறைந்தது என்பதையும் விஜயகாந்த் அடிக்கோடிட்டு சொல்லிக்காட்டியுள்ளார்.
கூட்டணி வைத்தால் அம்பேல்
கூட்டணி அமைத்த பிறகு தேமுதிக சரிவைத்தான் சந்தித்துள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு மாற்றாக நாம் இருக்கும்வரைதான் மக்கள் நம்மை நம்புவார்கள். இந்த இரு கட்சிகளோடும் மாறி, மாறி கூட்டணி வைத்தால், இதற்கு முன்பு பெரிய கட்சிகள் பல எப்படி வீழ்ந்தனவோ அதேபோல தேமுதிக வீழும் என விஜயகாந்த், ரமணா பாணியில் புள்ளி விவரம் கூறினாராம்.
பங்கு கிடைக்காது
பிறரின் வெற்றிக்காக நாம் ஏன் உழைக்க வேண்டும்? இப்போதைக்கு திமுக கூட்டணியில் சேர்ந்தாலும், நமக்கு அமைச்சரவையில் பங்கு கிடைக்கப்போவதில்லை. எனவே, தேர்தலுக்கு 2 மாதத்துக்கும்மேல் அவகாசம் உள்ளது. எனவே, சரியான நேரத்தில் நல்ல முடிவை எடுப்பேன் என்று நிர்வாகிகளிடம் கூறி அனுப்பி வைத்துள்ளார் விஜயகாந்த்.
பாஜக பக்கம்
தேமுதிகவின் கோரிக்கைகள் திமுக தரப்பில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதால்தான், மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது தேமுதிக என்கிறது அக்கட்சி வட்டாரம். இதனால், இப்போது பாஜக பக்கம் நகர்கிறது தேமுதிக.