குமரி, நெல்லை, தூத்துக்குடியில் போட்டியிட விரும்புகிறோம் - உதயகுமார்
இடிந்தகரை: நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருக்கிறோம். தேர்தலில் எந்தனை இடங்களில் போட்டியிட இருக்கிறோம் என்பதை ஒருவாரத்தில் தெரிவிப்போம் என்று எளிய மக்கள் கட்சியில் இணைந்துள்ள சுப. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் எங்களது மக்கள் அளிக்கப்போகும் ஆதரவை பொறுத்திருந்து பாருங்கள். அதேவேளையில் கட்சியை விட்டு வெளியே வருமாறு மக்கள் கூறினால் வெளியே வந்துவிடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"ஆம்ஆத்மி" எனப்படும் எளிய மக்கள் கட்சியில் கூடங்குளம் போராட்டக் குழுவினர் இணையும் நிகழ்ச்சி இடிந்தகரையில் நடந்தது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பிரசார குழுத்தலைவர் டேவிட் வருண்குமார், ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ஓய்வு பெற்ற நீதிபதி சேவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்களின் முன்னிலையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், மைபா ஜேசுராஜ் உள்ளிட்டோர் ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில்,
பின்னடைவு இல்லை
கூடங்குளம் அணுஉலையை மூடவேண்டும் என்கிற எங்களது கோரிக்கையில் எந்தவித பின்னடைவும் இல்லை. தொடர்ந்து அணுஉலைக்கு எதிரான போராட்டம் நடக்கும். போராட்டத்தை எங்களை விடவும் திறமையாக பெண்கள் முன்னின்று நடத்துவார்கள்.
அரசியல் ரீதியாக போராட
இந்த கிராமத்திற்குள்ளேயே இருந்து போராட்டத்தில் வெற்றி பெறமுடியாது என்பதை கருத்தில்கொண்டு அரசியல்ரீதியாக எங்களது கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் நாங்களே வாதாடுவதற்காக இந்த முடிவை எடுத்திருக்கிறோம். அரசியல் கட்சியில் சேர்வது தொடர்பாக நாங்கள் எங்களது மக்களோடும் சமுதாயத் தலைவர்களோடும் கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுத்திருக்கிறோம்.
நல்ல கொள்கையோடு
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அணுமின் திட்டங்களை இன்னும் அதிக அளவில் கொண்டுவருவார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததால் எங்கள் போராட்டத்தையே ஒடுக்கி விடுவார்கள். எனவே அந்த 2 கட்சிகளுக்கும் மாற்றாக இன்றைய சூழ்நிலையில் ஒரு நல்ல கொள்கையோடு செயல்பட்டு வருகின்ற "ஆம் ஆத்மி" கட்சியில் சேருகிறோம்.
உறுதி அளித்துள்ளனர்
ஈழத்தமிழர்கள் பிரச்சினையை சர்வதேச அளவுக்கு கொண்டுசெல்லவும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கண்டித்து நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர். அணுஉலை தொடர்பாகவும் தெளிவான முடிவை கூறியிருக்கிறார்கள். அது மட்டுமின்றி "ஆம்ஆத்மி" கட்சியின் பெயரை எளிய மக்கள் கட்சி என மாற்ற அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.
போராட்டக் களத்தின் மாற்றுப் பாதை
இதனால் "ஆம்ஆத்மி" கட்சியில் சேர்வதன் மூலம் எங்களது மக்கள் பணி அரசியலுக்கு செல்கிறது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு அரசியல் கட்சியினரை நாடிச்செல்ல வேண்டியுள்ளது. எனவே தான் நாங்கள் போராட்டக் களத்தை மாற்றுப்பாதையில் முன்னெடுப்பதற்காக அரசியலில் அடியெடுத்து வைக்கிறோம்.
கட்டாயப்படுத்தவில்லை
நாங்கள் எப்பொழுதும் யாரையும் கட்டாயப்படுத்தி போராட்டத்தில் பங்கேற்க சொல்லவில்லை. அரசியல் கட்சியில் சேரவும் கட்டாயப்படுத்தவில்லை. சிலருக்கு இதில் விருப்பமில்லை. அதற்காக எங்களுக்குள் பிரிவினை இருப்பதாக அர்த்தமில்லை. கூடங்குளம் அணுமின் திட்டத்தை மூடவேண்டும் என்பதில் நாங்கள் பின்வாங்கவில்லை.
3 தொகுதிகளில் போட்டியிட விருப்பம்
நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருக்கிறோம். தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிட இருக்கிறோம் என்பதை ஒருவாரத்தில் தெரிவிப்போம். தேர்தலில் எங்களது மக்கள் அளிக்கப்போகும் ஆதரவை பொறுத்திருந்து பாருங்கள். அதேவேளையில் கட்சியை விட்டு வெளியே வருமாறு மக்கள் கூறினால் வெளியே வந்துவிடுவோம் என்று உதயகுமார் தெரிவித்தார்.