நடந்தாலே சோர்வு, அப்பப்போ ஓய்வு.. சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் செய்வாரா ஜெயலலிதா?
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மிகவும் சோர்வோடு காணப்படுவதால் சட்டசபை தேர்தலில் அவர் சூறாவளி பிரச்சாரம் செய்வது கஷ்டமான காரியம் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
சென்னை, ராயப்பேட்டையிலுள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், அமைச்சர்கள் வைத்திலிங்கம், காமராஜ், எஸ்.பி.சண்முகநாதன், முக்கூர் என்.சுப்பிரமணியன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் 14 பேர்களின் இல்லத் திருமணங்களை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தலைமை தாங்கி நடத்தி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
இந்தத் திருமணத்துக்கு தடபுடல் வரவேற்பு வழங்கப்பட்டிருந்தது. ராயப்பேட்டை பகுதி முழுவதும் பேனர்களும், தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. மாநாடு போல இருந்தது திருமண நிகழ்ச்சி.
வித்தியாச ஜெயலலிதா
விழாவுக்கு ஜெயலலிதா வந்ததும், திருமண வீட்டார்களை ஒவ்வொருவராக அழைத்து, திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த விழாவில்தான் ஜெயலலிதாவிடம் சில வித்தியாசங்களை பத்திரிகையாளர்கள் கவனித்தனர்.
பானங்கள் தவிர்ப்பார்
பொதுவாக, எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும்போதும், ஜெயலலிதா எதுவும் சாப்பிடமாட்டார். பானங்கள் எதுவும் அருந்த மாட்டார். தாகம் ஏற்பட்டால் மினரல் வாட்டர் குடிப்பதோடு சரி. சட்டசபை நிகழ்ச்சிகளின்போது அதிக நேரம், காலம் செலவிட வேண்டும் என்பதால், அப்போது மட்டும் பழரசம் சாப்பிடுவது வழக்கம்.
ஹெல்த் ட்ரிங்ஸ்
ஆனால் திருமண நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்றபோது இரண்டு பிளாஸ்க்குகளில் 'ஹெல்த் ட்ரிங்ஸ்' கொண்டு வரப்பட்டன. அதை ஜெயலலிதா ஸ்ட்ரா வைத்துக் குடித்தார். பொது நிகழ்ச்சியில் அவர் பானம் அருந்தியது மிகவும் அரிதானது என்பதாக பத்திரிகையாளர்கள் கிசுகிசுத்துக்கொண்டனர்.
மேடை அருகே கார்
இந்தத் திருமணத்துக்கு வந்த ஜெயலலிதாவின் கார் மேடைக்கு பின்புறமாக வந்து நின்றது. காரில் இறங்கியதும் மேடையில் ஏறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வேறு யாருக்குமே, விழா பந்தல் அருகே கூட கார்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஓய்வு
14 ஜோடிகளுக்கு திருமணங்களை நடத்தி வைத்தபோது ஒவ்வொரு திருமணத்துக்குப் பிறகும் சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டார் ஜெயலலிதா. ஒவ்வொரு ஜோடியாக மேடைக்கு அழைக்கப்பட்டபோது இருக்கையில் அமர்ந்துவிட்டு பிறகு எழுந்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
நடக்க சிரமமா?
அமைச்சர்கள் பேசியபோது மைக் பொருத்தப்பட்ட போடியம் பகுதி, மேடையின் ஒரு ஓரத்தில் இருந்தது. ஆனால் ஜெயலலிதாவோ அங்கு சென்று பேசவில்லை. ஜெயலலிதா இருந்த இருக்கைக்கு பக்கத்திலேயே மைக் போடியத்தைத் தூக்கி வந்து வைத்தார்கள் ஊழியர்கள்.
நடப்பதை தவிர்க்கிறார்
திருமண விழாவில் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்துமே வைத்து பார்த்தால், ஜெயலலிதா சில அடி தூரம்கூட நடக்கச் சிரமப்படுகிறார் என்பது தெரிகிறது என்கிறார்கள் சில அதிமுக நிர்வாகிகள். ஏற்கனவே பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார் ஜெயலலிதா. வெள்ள பாதிப்பின்போதும், காரை விட்டு கீழே இறங்கி மக்களோடு அவர் கலந்துரையாடவில்லை. ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டுமே ஜெயலலிதா சென்றார்.
பிரச்சாரம் எப்படி
ஜெயலலிதாவின் சமீபத்திய நடவடிக்கைகளை வைத்து பார்க்கும்போது, சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு ஜெயலலிதா நேரில் போவாரா, அல்லது வாட்ஸ்அப், வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக உரையாற்றுவாரா என்பது புரியவில்லை.
பலமே பிரச்சாரம்தான்
உடல்நிலை ஒத்துழைத்தால் ஒரு சில இடங்களில் பொதுக்கூட்டங்களில் பேச ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க பலம் ஜெயலலிதாவின் ஆக்ரோஷ பேச்சுதான். இப்போது அவர் பிரச்சாரத்திற்கு வருவாரா, வரமாட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அதிமுகவினர் கையை பிசைகிறார்கள்.