ரஜினியாவது.. தினகரனுக்குப் பயந்து பின் வாங்குவதாவது... தவறான தகவலால் கொதிக்கும் ரசிகர்கள்!
தினகரன் வெற்றியால் ரஜினி தனது அரசியல் கட்சி அறிவிப்பை தள்ளி போடவுள்ளதாக வெளியான பொய் தகவலால் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
சென்னை: தினகரன் வெற்றியால் ரஜினி தனது அரசியல் கட்சி அறிவிப்பையும் கட்சித் தொடங்கும் திட்டத்தையும் தள்ளி வைத்துள்ளதாக வந்த பொய்யான தகவலால் அவரது ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
கடந்த மே மாதம் ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேச தொடங்கியது முதல் பிரளயம்தான். ஏகப்பட்ட எதிர்ப்புகள். தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று குரல்கள் வலுத்து ஒலித்தன.
சிலரோ ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றனர். அதேசமயம், ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு மத்தியில் ரஜினியால் அரசியலில் ஜொலிக்க முடியாது என்ற கருத்துகளும் உலவின.
ஏற்பாடுகள் தீவிரம்
ரஜினிகாந்த் மே மாதத்துக்கு பிறகு, அமைதியாக இருந்ததாக பலர் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் திரை மறைவிலிருந்து கட்சி கொடி, பெயர் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். இன்னும் அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி.
நாளை அறிவிப்பு
இந்நிலையில் ரசிகர்களை நாளை முதல் 6 நாட்களுக்கு ரஜினி சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அறிவிப்பார் என்று தமிழருவி மணியனும், ரஜினியின் நண்பர் ராஜ்பகதூரும் கூறியுள்ளனர். நாளை செய்தியாளர்களை சந்தித்து எப்போது கட்சித் தொடங்குகிறார் என்ற தேதியை ரஜினி அறிவிப்பார் என்று தெரிகிறது. ஜனவரி 4-ஆம் தேதி புதுக்கட்சி தொடங்க ரஜினி திட்டமிட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.
ரஜினி பின்வாங்குகிறார்
இந்த நிலையில்தான் ஆர்கே நகரில் டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தினகரனின் வெற்றியால் அரசியல் அறிவிப்பை வெளியிட ரஜினி தயக்கம் காட்டுவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நிரப்ப திட்டமிட்டு இருந்த நிலையில், தினகரனின் மாபெரும் வெற்றி ரஜினியை மீண்டும் யோசிக்க வைத்து உள்ளதால் தனது அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்துள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.
திமுகதான் காரணம்
இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில் தினகரனுக்காக அச்சப்படும் ஆள் ரஜினி இல்லை. தினகரனை வெற்றி பெற செய்தது திமுகதான். இதை அதிமுகவினரே கூறியுள்ளனர். ரஜினி அரசியலுக்கு வந்தால் அனைத்து கட்சிகளும் காணாமல் போய்விடும் என்பதால்தான் இதுபோன்று ரஜினி தயக்கம் என்பது போன்ற பொய்யான தகவல்கள் உலா வருகின்றன. தினகரனுக்காக கட்சி தொடங்குவதை தள்ளி போடுகிறார் என்று கூறுவது காமெடியாக உள்ளது. எனவே அவர் கண்டிப்பாக நாளை அறிவிக்கும் தேதியில் அரசியலுக்கு வருவார் என்று அடித்து கூறுகின்றனர்.