கொறடா உத்தரவு மீறல்.. ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவின் 12 எம்.எல்.ஏக்கள் பதவி பறிபோகுமா?
சென்னை: எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்க பிறப்பிக்கப்பட்ட அதிமுகவின் கொறடா உத்தரவை மீறிய 12 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்து பதவியை பறிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு தாவிய முக்கிய தலைவர்களான தலைவர்களான சி.பொன்னையன், பி.எச்.பாண்டியன், அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் முனுசாமி, நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட 21 பேர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கி அ.தி.மு.க. பொதுச் செயலாலர் சசிகலா சில தினங்கள் முன்பு (சிறை செல்லும் முன்பு) உத்தரவிட்டார்.

இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறி ஓ.பி.எஸ், மாஃபா உட்பட 11 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் கவனிக்க வேண்டியது ஓ.பி.எஸ் மற்றும் மாஃபா ஆகியோர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கொறடா உத்தரவை மீறியதால் எம்.எல்.ஏ பதவி பறிபோகாது. இத்தனைக்கும் ஓ.பி.எஸ்சையும் சேர்த்து 134 எம்.எல்.ஏக்களுக்கும் சேர்த்தே அதிமுக கொறடா, உத்தரவை பிறப்பித்திருந்தது கவனிக்கத்தக்கது. அதேநேரம், பிற 9 எம்.எல்.ஏக்கள் மற்றும் வாக்கெடுப்பை புறக்கணித்த கோவை வடக்கு எம்.எல்.ஏ அருண்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை பாயலாம்.
அதேநேரம், கொறடா என்பவர் அமைச்சரவை மாற்றத்தின்போது புதிதாக நியமிக்கப்பட வேண்டியவர். எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை பொறுப்பேற்றபிறகு அதிமுக சார்பில் புதிய கொறடா நியமிக்கப்படவில்லை. எனவே அவரது உத்தரவை மீறியது தப்பாகாது என்ற வாதம் எதிர்த்து ஓட்டுப் போட்டவர்களுடையது.
எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கொறடா பரிந்துரை செய்தால், அதை எதிர்த்து எம்.எல்.ஏக்கள் கோர்ட்டுக்கு போக வேண்டிய நிலை ஏற்படும்.












Click it and Unblock the Notifications