சென்னையில் 2015-ஆம் ஆண்டு போல மழை, வெள்ளம் ஏற்பட்டுமா? ரமணன் கணிப்பு இது
Recommended Video
சென்னை: 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு காரணமான பேய் மழை திரும்பவும் வருமா என்ற கேள்விக்கு சென்னை வானிலை ஆய்வு மைய ஓய்வு பெற்ற இயக்குநர் ரமணன் பதில் அளித்தார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரமணன் பங்கேற்றார். அப்போது, மக்களுடன் தொலைபேசியில் அவர் பேசி சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். பெரும்பாலான சென்னை மக்களின் கேள்வி, 2015ம் ஆண்டை போல வெள்ள சேதம் ஏற்படுமோ, அந்த அளவுக்கு இந்த ஆண்டு மழை இருக்குமோ என்பதுதான்.
அந்த அளவுக்கு முதல் மழையிலேயே மக்கள் அச்சத்தில் உள்ளதை கேள்விகளின் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது.
சிறப்பான மழைக்காலம்
இதுகுறித்து ரமணன் கூறியது இதுதான்: வடகிழக்கு பருவமழையின் ஆரம்பமே சிறப்பாக அமைந்துவிட்டது. இந்த வருடம் சிறப்பான மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 2015ம் ஆண்டு அளவுக்கு மழை இருக்கமா என்பதை இப்போதே கூற முடியாது. ஆனால் கடந்த வருடத்தை போல குறைவாக இருக்காது.
கடந்த ஆண்டை போல இருக்காது
கடந்த ஆண்டு மழை பொழிவு குறைவாக இருந்ததால் பல இடங்களில் வறட்சி ஏற்பட்டது. நிச்சயம் அதுபோன்ற சூழ்நிலை இப்போது ஏற்படாது என்பதை மட்டும் என்னால் உறுதியோடு கூற முடியும்.
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
இப்போதுதான் முதல் காற்றழுத்தம் ஏற்பட்டுள்ளது. இன்னும் இம்மழைக்காலத்தில் பல காற்றழுத்த நிலைகள் ஏற்படும். அவை எங்கே உருவாகுகின்றன, எத்தனை உருவாகுகின்றன என்பதையெல்லாம் பொறுத்துதான் மழை மற்றும் வெள்ளம் குறித்து தெரியவரும். எனவே பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எதையும் சமாளிக்க ரெடியாக இருக்க வேண்டும்.
மாநிலம் முழுவதற்கும் மழை
இம்முறை மன்னார் வளைகுடாவில் காற்றழுத்தம் உருவானதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை இருக்கும். பொதுவாக மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்தம் உருவானால் அனைத்து மாவட்டங்களுக்குமே மழை கிடைப்பது வழக்கம்தான். கடலோர மாவட்டங்களில் அதிக அளவில் மழை இருக்கும். உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானதுவரை மழை இருக்கும் என்றார் ரமணன்.