மக்கள் கோபத்தை தணிக்க, ஐடி ரெய்டுக்கு பிறகு இந்த விஷயத்தை மத்திய அரசு செய்தேயாக வேண்டும்!
Recommended Video
சென்னை: சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார், நண்பர்கள் என பலரையும் குறி வைத்து நடந்து கொண்டுள்ளது ஐடி ரெய்டு.
இத்தோடு சசிகலா குடும்ப சாம்ராஜ்யமே வீழ்த்தப்பட்டுவிடும் என்று சிலரும், பத்தோடு பதினோறாவது ரெய்டுதான் இது என்று சிலரும் ஆரூடம் கணித்துக் கொண்டுள்ளனர்.
அவர்கள் சொல்வதிலும் நியாயம் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் நடந்த பல ஐடி ரெய்டுகள் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. மத்திய அரசை நேரடியாக தாக்கிப்பேசிய பிறகும்கூட முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகனராவ் வீட்டில் நடந்த ஐடி ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன என்ற ரகசியம் வெளியிடப்படவேயில்லை.
பழிவாங்கும் நடவடிக்கை?
எனவே தொடர் ஐடி ரெய்டுகள் மத்திய அரசு மீது தமிழக மக்களுக்கு கோபத்தையை ஏற்படுத்தியுள்ளன. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மட்டுமே இருப்பதாலும், ஒரு சில நாட்கள் எதிர் தரப்பை டென்ஷன்படுத்தவுமே இது பயன்படுவதாக மக்கள் நினைக்க தொடங்கியுள்ளனர். இதனால் வருமான வரித்துறை ரெய்டுகள் மீதான மரியாதை மக்கள் மன்றத்தில் குறையத் தொடங்கியுள்ளது.
வெளிப்படை தேவை
இந்த மரியாதையை வருமான வரித்துறையும், மத்திய அரசும் மீட்டெடுக்க செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஐடி ரெய்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்ன, எவ்வளவு மதிப்பிலான பொருட்கள் கணக்கில் காட்டப்படாதவை என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஆர்.டி.ஐ சட்டம் வந்துவிட்ட இந்த காலகட்டத்திலும் ஐடி ரெய்டு ரகசியங்களை பாதுகாப்பது வீண் வேலை. லோக்ஆயுக்தா சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படும் கர்நாடகாவில் இப்படி உடனே லோக்ஆயுக்தா நீதிபதி பிரஸ் மீட் வைத்து முழு விவரத்தையும் போட்டு உடைத்து வருவதை நாம் பார்த்துள்ளோமே.
தப்பே செய்யவில்லை
சசிகலா குடும்பத்திடமிருந்து எவ்வளவு அதிக சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பதை அறிந்தால்தான், மக்கள் மன்றத்தில் அவர்களை அம்பலப்படுத்தியதாக மத்திய அரசால் மார்தட்ட முடியும். அல்லது, மக்கள் மன்றத்தில் மத்திய அரசுதான் குற்றவாளி போல பார்க்கப்படும். சசிகலா குடும்பத்தினருக்கு இது அரசியல் மைலேஜை அளிக்கும். நாங்கள் தப்பே செய்யவில்லை, நெருப்பாற்றில் நீந்தி அதை நிரூபித்துவிட்டோம் என்றெல்லாம் மேடைகளில் அவர்கள் முழங்கவும் கூடும்.
தமிழக சொத்து
இதில் முக்கியமான ஒரு விஷயமும் உள்ளது. வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்துக்கள் பல கோடி இருக்குமாயின், அதுதமிழக அரசின் கருவூலத்தில் சேர்க்கப்பட வேண்டும். ஆட்சி அதிகாரம் உதவியின்றி, சாதாரண ஒரு குடும்பத்தினரால் இத்தனை சாம்ராஜ்யங்களை நடத்தியிருக்க முடியாது. எனவே, மக்களின் சொத்தாகவே அது பார்க்கப்பட வேண்டும். தமிழக மக்களின் நலனுக்காக அது அரசின் கருவூலத்திற்கே திரும்ப செலுத்தப்பட வேண்டும். இதை பாஜக அரசு முழு முயற்சியோடு செய்து காட்டி விசாரணையை துரிதப்படுத்தி முடித்துவிட்டால், அப்போது இதுவரை நடத்திய ஐடி ரெய்டுகளுக்கு பதில் கொடுத்த மாதிரி இருக்கும். மக்களிடம் ஏற்பட்ட சந்தேகம், கோபத்தை அது தணிப்பதாகவும். நீங்கள் செய்வீர்களா?