தமிழ் உணர்வோடு, வாழப்பாடி ராமமூர்த்தி போல அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா பொன்.ராதாகிருஷ்ணன்?
சென்னை: தமிழ் உணர்வோடு வாழப்பாடி ராமமூர்த்தி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை போல மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1991ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது மத்திய அமைச்சராக பதவி வகித்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. இந்த நிலையில், 1992ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சனையில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டபோது, மத்திய அரசு கர்நாடகாவுக்கு சாதகமாக செயல்பட்டது.
இதை பார்த்துக் கொண்டும் பதவி சுகத்துக்காக சகித்துக் கொண்டிருக்காமல், பதவியை துச்சமென தூர போட்டுவிட்டு தமிழர்கள் நலனுக்காக, மத்திய அமைச்சர் பதவியை தூக்கி எறிந்துவிட்டார் வாழப்பாடி ராமமூர்த்தி. அதன்பின்னர் மக்கள் நலன் சார்ந்த உணர்வுடன் தமிழகத்தை சேர்ந்த எந்த அமைச்சரும் இதுவரை பதவியை தியாகம் செய்யவில்லை.
ஒரு விளையாட்டை கூட நடத்த முடியவில்லை
காவிரி என்பதாவது இரு மாநில பிரச்சினை. நியாயமே இருந்தாலும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக தமிழகம் பல நேரங்களில் விட்டுக்கொடுத்துள்ளது. ஆனால், ஜல்லிக்கட்டு என்பது சாதாரண ஒரு விளையாட்டு. இதை கூட தமிழகத்தில் நடத்த முடியாத சூழல் உள்ளது. சட்டத் திருத்தம் செய்து ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ரெடியாக இல்லை.
ஆசைகாட்டி மோசம்
அதேநேரம், கடந்த இரு வருடங்களாகவே மத்திய இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு நடைபெறும் என கூறிக்கொண்டே வருகிறார். கடந்த ஆண்டும் ஆசை காட்டி கடைசியில் மோசம்தான் நடந்தது. இந்த ஆண்டும் பொன்.ராதாகிருஷ்ணன்தான் அதிகமாக ஆசை காட்டியபடியே இருந்தார். அதேநேரம் மத்திய அமைச்சர் தாவே, சட்ட திருத்தம் செய்ய முடியாது என அறிவித்துவிட்டார்.
இதன்பிறகும் பதவி எதற்கு?
தமிழகத்திலிருந்து பாஜக சார்பில் வெற்றி பெற்ற ஒரே லோக்சபா உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன்தான். அவர் மத்திய இணை அமைச்சராகவும் உள்ளார். தமிழகத்தில் ஒரு விளையாட்டு போட்டியை கூட நடத்த செய்ய முடியாத அந்த பதவி எதற்கு என இன உணர்வோடு பொன்.ராதாகிருஷ்ணன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் இனிமேலும் நீதிமன்றத்தை கைகாட்டி தப்பிக்க முடியாத நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளார். எனவே குறைந்தபட்சமாக தனது எதிர்ப்பை இப்படியாவது அவர் பதிவு செய்து தமிழர்களின் உணர்வுக்கு மரியாதை கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.
தொடர்ந்து மவுனமா?
ஜல்லிக்கட்டு விவகாரம், பாலாறு அணை, மீனவர் பிரச்சனை, முல்லை பெரியாறு அணை, காவிரி மேகதாது விவகாரம் என தொடர்ந்து மத்திய அரசு துரோகம் செய்த போதும் பொன். ராதாகிருஷ்ணன் வாய் மூடி பேசாமல், மத்திய அமைச்சர் பதவியில்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறார். இப்போதாவது தமிழர் நலன் சார்ந்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வாழப்பாடி ராமமூர்த்தி போல அமைச்சர் பதவியை பொன். ராதாகிருஷ்ணன் தூக்கி எறிந்துவிட்டு வரவேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.