கணவரைக் காலி செய்த ரவுடியை ஆள் வைத்த கொன்ற மனைவி... கைது!
சென்னை: எழும்பூரில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு கடந்த 9ஆம் தேதி டி.வி.செந்தில் (45) என்ற ரவுடியை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக எழும்பூர் போலீஸார் விசாரணை நடத்தி சரவணன் என்பவர் உட்பட 7 பேரை கைது செய்தனர்.
செந்திலை கொலை செய்தது ஏன்? என்று கூலிப்படை தலைவன் ஜான்சன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தான். ஆதம்பாக்கத்தில் வசிக்கும் தனது காதலியை, செந்தில் அபகரித்துக்கொண்டார். இந்த காதல் போட்டியில் எனக்கும், அவருக்கும் ஏற்கனவே பகை இருந்தது. எனவேதான் வெட்டிக்கொன்றதாகவும் தெரிவித்தான்.
ஆனாலும் சமாதானம் அடையாத போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பெண் ஒருவர் பணம் கொடுத்து கொலை செய்ய சொன்னதால் செய்தோம் என்று தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த பெண்ணையும் எழும்பூர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
அதிமுக பிரமுகர் கொலை
"2013-ம் ஆண்டு ஆதம்பாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஏழுமலை என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த டி.வி.செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டார்.
ஏழுமலையின் மனைவி
செந்திலை கொலை செய்து கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஏழுமலையின் மனைவி கவிதா(40)தான் பணம் கொடுத்து கொலை செய்ய சொன்னது தெரியவந்தது.
பழிக்குப் பழி
கணவனை கொன்ற செந்திலை கொலை செய்வதற்கு ரூ.10 லட்சம் தருவதாக கூறி, முன்பணமாக ரூ.2 லட்சம் கொடுத்ததாக கைதானவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து கவிதாவை நேற்று போலீசார் கைது செய்தனர்.
ரவுடி கொலையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.