ஜெ., நலம்பெற வேண்டி பால்குடம் எடுத்த மூதாட்டி பலியானது எப்படி?
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி பால்குடம் எடுத்த பெண் கூட்டநெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். கோவில் கோவிலாக பல்லாயிரக்கணக்கில் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி திருவண்ணாமலையில் பச்சையம்மன் கோவிலில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5008 பால்குட ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் அதிகளவு கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்கள் அழைத்து வந்தனர்.
அப்போது நீண்ட நேரமாக காத்திருந்த பெண்கள், பால் குடங்களை பெறுவதற்காக ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு சென்றனர். இவர்களில் 6 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். அனைவரையும் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதில் மயக்கமடைந்த 60வயது மதிக்கத்தக்க கமலாம்பாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னாள் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் ராஜனுக்கும் கோஷ்டி சண்டை உச்சக்கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயலலிதா குணமடைய வேண்டி இவ்விருவரும் போட்டி போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துவதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.