பலாத்தகாரம் செய்ய முயன்ற அக்காள் கணவரை கொலை செய்த மாணவி: விடுதலை கிடைக்குமா?

சென்னையை அடுத்த மாதவரம் டெலிபோன் காலனி முதல் தெருவைச் சேர்ந்தவர் மேத்யூ பினோராஜ் (வயது 34). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இவர் தனது மனைவி ஹேமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மனைவியின் தங்கை ஹரிபிரியாவும் மேத்யூவின் வீட்டில் தங்கி பி.காம் படித்து வந்தார்.
மேத்யூ பினோராஜ் தினமும் இரவு நேரங்களில் குடித்துவிட்டு வந்து ஹரிபிரியாவிடம் பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று விடியற்காலையில் அவரை பலாத்காரம் செய்ய முயன்றார் மேத்யூ. அப்போது தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக அக்காள் கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபிரியாவை கைது செய்தனர். ஹரிபிரியாவை கடந்த வெள்ளியன்று திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாணவியிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் எனவும், மருத்துவ பரிசோதனை மற்றும் வாக்குமூலம் பெற வேண்டும் எனவும் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்பேரில் மாஜிஸ்திரேட்டு ஹரிபிரியாவை போலீசாருடன் அனுப்பிவைத்தார்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரிபிரியாவை கொலை வழக்கில் இருந்து மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்ற அவர் மீது இ.பி.கோ 302 சட்டப்பிரிவை பயன்படுத்தவில்லை.
இ.பி.கோ 100 சட்டப்பிரிவு
தன் கற்பை பாதுகாத்துக்கொள்ள அக்காள் கணவரை கொலை செய்த ஹரிபிரியாவை மனிதாபிமான அடிப்படையில் இ.பி.கோ 100 சட்டத்தின் கீழ் வழக்கில் இருந்து விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது,
விசாரணையில் இருக்கும் மாணவியிடம் அவரின் மனநிலை கருதியும், மனிதாபிமான அடிப்படையிலும் அவரது அக்காள் ஹேமாவை உடன் அனுமதித்துள்ளதாக தெரிகிறது. ஹரிபிரியாவை ரகசிய இடத்தில் போலீசார் வைத்துள்ளனர்.
7 ஆண்டுகளாக தொல்லை
7 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த அத்தான் மேத்யூ சம்பவ தினத்தன்று தனது மனைவிக்கும் மதுவை ஊற்றிக் கொடுத்து மயக்கமடையச் செய்துவிட்டு ஹரிப்பிரியாவை பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
கற்பை காக்க கொலை
இந்திய தண்டனை சட்டம் 100 வது பிரிவின் கீழ், 6 விதமான தற்காப்புச் சம்பவங்களில் எதிராளியிடம் இருந்து கற்பைக் காப்பாற்றிக் கொள்ள ஆயுதங்களை எடுத்தால் தவறில்லை என்று கூறப்பட்டுள்ளது.
பலாத்கார முயற்சியின் போது ஒரு தன்னை காத்துக்கொள்ள என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதே அது. எனவேதான் மாணவியை சிறைக்கு அனுப்பி வைக்காமல் உள்ளனர் போலீசார்.
மாணவி விடுவிக்கப்படுவாரா?
மாணவியை விடுவிக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் போலீசார் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மனித உரிமை ஆர்வலர்கள் என்ற பெயரில் யாரும் ஹரிப்பிரியாவிற்கு எதிராக செயல்பாடாமல் இருக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாணவி இன்று திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னரே மாணவி விடுவிக்கப்படுவாரா? என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications