பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் கொலையில் கைரேகைகள் சிக்கியது- செல்போன் அழைப்பு குறித்து விசாரணை
சாப்ட்வேர் என்ஜீனியர் உமா மகேஸ்வரி கொல்லப்பட்ட இடத்தில் கைரேகைகள் கிடைத்துள்ளன.அவரது அலைபேசியில் அவருக்கு வந்த, அவர் அழைத்த எண்கள் கிடைத்துள்ளன. அதுபற்றி ஆராய்ந்து வருகிறோம் என, சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை சிறுசேரி டி.சி.எஸ்., நிறுவனத்தை சேர்ந்த உமா மகேஸ்வரி கொல்லப்பட்ட வழக்கில் சம்பவ இடத்தை நேற்று முன்தினம் மாநில டி.ஜி.பி., ராமானுஜம் பார்வையிட்டார். அந்த இடத்தில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் உதவியுடன் ஆளில்லா விமானம் மூலம் இரண்டாவது நாளாக நேற்றும் வீடியோக்கள் எடுக்கப்பட்டன.
சி.பி.சி.ஐ.டி போலீசார் தங்கள் விசாரணையை நேற்று துவக்கினர். கூடுதல் எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் நேற்று சிறுசேரியில் சடலம் கிடைத்த பகுதியில் சோதனை நடத்தினர். அதில் பிளேடு, தலைமுடி, சிகரெட் துண்டுகள், பழைய "சிம் கார்டு'கள், துணிகள் ஆகியவை சேகரிக்கப்பட்டன.
மேலும், உமா மகேஸ்வரியின் படத்தை காட்டி 81 ஆட்டோ ஓட்டுனர்கள், மாநகர குளிர் சாதன பேருந்துகளின் ஓட்டுனர்கள் மற்றும் உமா மகேஸ்வரியுடன் பணிபுரிந்த சக பணியாளர்கள் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
உமா மகேஸ்வரியின் அலைபேசிக்கு வந்த அழைப்புகள், அவர் தொடர்பு கொண்ட எண்களுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் வரவழைத்து விசாரித்தனர். உடன் பணியாற்றிய தோழிகளுக்கு தெரிந்த திருப்போரூரைச் சேர்ந்த பெண்ணிடமும் விசாரித்தனர்.
சிறுசேரியின் நுழைவுபகுதி மற்றும் கேளம்பாக்கத்தை சுற்றி சாதாரண உடைகளில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி அதிகாரி ஒருவர் கூறுகையில்,"சம்பவ இடத்தில் சில கைரேகைகள் கிடைத்துள்ளன. உமா மகேஸ்வரியின் அலைபேசிக்கு வந்த அழைப்புகள், அவர் அழைத்த எண்கள் ஆகியவற்றை பற்றி ஆராய்ந்து வருகிறோம்' என்றார்.
இந்த நிலையில் டி.சி.எஸ் பணியாளர்கள் மத்தியில் நேற்று குறுஞ்செய்தியாக பரப்பப்பட்ட தகவலில்,"உமா மகேஸ்வரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. அதனால், நமது நிறுவனத்தை சேர்ந்த பெண்கள், இரவு நேர பணிக்கு வரும் போது, அலுவலக வாகனங்கள் வராமல் வெளியில் செல்ல வேண்டாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.