அதிமுக சக்கர வியூகத்தில் மாட்டிய அபிமன்யு போல இருக்கிறது.... அதை மீட்போம் - திவாகரன்
சக்கரவியூகத்தில் சிக்கிய அபிமன்யு போல அதிமுக சிக்கிக்கொண்டுள்ளது. அதை மீட்க தங்களால் மட்டுமே முடியும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
சென்னை: மகாபாரதப் போரில் சக்கர வியூகத்தில் சிக்கிய அபிமன்யு போல அதிமுக சிக்கிக்கொண்டுள்ளது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
அதிமுகவில் அடுத்தடுத்த பரப்புகள் அரங்கேறி வருகின்றன. டிடிவி தினகரன் நியமனம் செல்லாது என்று எடப்பாடி பழனிச்சாமி அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதனையடுத்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார் டிடிவி தினகரன். தஞ்சாவூரில் இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அந்த சமயத்தில் முடிவு செய்யப்படும். அதிமுகவை காக்கும் பொறுப்பில் நான் இருக்கிறேன். தேவைப்படும் நேரத்தில், தேவையான நபர்களுக்கு அறுவை சிகிச்சை நடைபெறும் என்று கூறினார்.
பதவி தேவையில்லை
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய திவாகரன், 1972 முதல் அதிமுகவில் இருப்பதாக கூறினார். அதிமுக தொண்டர்கள் மனதில் தனக்கு பதவி கொடுத்துள்ளதாக கூறினார். தனக்கு அதிமுகவில் புதிய பதவி எதுவும் தேவையில்லை என்றும் கூறினார்.
பேச்சாளர்கள் பட்டினி
அதிமுக சார்பாக ஒரு ஆண்டாக எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. அதிமுக தலைமை கழக பேச்சாளர்கள் பட்டினி கிடக்கிறார்கள். அதிமுக தலைமை கழக பேச்சாளர்களை யார் பாதுகாப்பது? இதற்காகவே டிடிவி தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
ஜெயலலிதாவிற்கு பலம்
சசிகலாவும் தினகரனும் 30 வருடங்களுக்கு மேல் ஜெயலலிதாவிற்கு பக்கபலமாக இருந்து கட்சியை வழிநடத்தியதாக குறிப்பிட்டார். ஆகையால் சசிகலா இல்லாமல் அதிமுக இல்லை. ஜெயலலிதாவின் முதல் பொதுக்கூட்டத்தில் தொடங்கி பல பொதுக்கூட்டங்களுக்கு பக்க பலமாக இருந்து பாதுகாப்பு அளித்தது தாங்கள்தான் என்று கூறினார்.
அதிமுக அபிமன்யூ
இப்போது அதிமுக மகாபாரதப் போரில் சக்கரவியூகத்தில் சிக்கிய அபிமன்யூ போல இருக்கிறது. அதை மீட்டு பாதுகாக்க வேண்டும். அது தங்களால் மட்டுமே முடியும் என்றும் திவாகரன் கூறியுள்ளார்.திவாகரன் கூறுவதைப் பார்த்தால் எடப்பாடி அணியினர் கவுரவர்கள் போலவும், டிடிவி திவாகரன் அணி பாண்டவர் அணி போலவும் கூறியுள்ளார். அதிமுக மூன்று அணியாக பிரிந்துள்ளதால் தொண்டர்களின் பாடுதான் திண்டாட்டமாக உள்ளது.