சூடுபிடிக்கும் ஏற்காடு: களமிறங்கிய அமைச்சர்கள்... திமுகவினரின் சென்டிமென்ட்
சேலம்: ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவினரும் திமுகவினரும் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தினால் குளுகுளு பிரதேசமான ஏற்காட்டில் அனல் பறக்கிறது. அதிமுக வேட்பாளர் சரோஜாவிற்கு அனுதாப அலை இருந்தாலும் 33 அமைச்சர்களும் போட்டி போட்டு வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
திமுகவினரோ வேட்பாளர் மாறனுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர். இவர்களின் புதிய வியூகத்தில் அதிமுக வேட்பாளர் சரோஜா மீள்வாரா? கடைசி நேரத்தில் திருமங்கலம் பார்முலாவை கையில் எடுப்பார்களா? என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளது ஏற்காடு இடைத்தேர்தல்.
33 அமைச்சர்கள்
வரும் டிச.4-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் வென்றாக வேண்டும் என்று முண்டாசு கட்டியுள்ள அதிமுக அமைச்சர்கள் வேட்பாளர் சரோஜாவுடன், அமைச்சர்கள் வீதிவீதியாகச் சென்று, வாக்கு சேகரித்து வருகின்றனர்.
52 பொறுப்பாளர்கள்
ஏற்காடு இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக 52 பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
வெற்றி பெற தீவிரம்
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, அதிமுக புறநகர் மாவட்டச் செயலர் பொறுப்பும் வகிப்பதால், ஏற்காடு இடைத்தேர்தலில் பெரும் வெற்றி பெற தீவிர முயற்சி மேற்கொண்டு கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.
சொந்தக்கட்சியினர் அதிருப்தி
சேலம் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளில் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமியின் ஆதரவு பெற்ற மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவரும், ஜெயலலிதா பேரவைச் செயலருமான இளங்கோவனின் ஆதிக்கம் காரணமாக சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே பல்வேறு சங்கடங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
அதிருப்தியில் அதிமுகவினர்
இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், இளங்கோவனின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும். அவரால் பயன்பெற முடியாதவர்கள், மீண்டும் அதே நிலைக்குத் தள்ளப் படக்கூடிய சூழல் ஏற்படும் என சிலர் கருதுகின்றனர்.
திசை திருப்பும் திமுக
திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதிருப்தியில் உள்ள அதிமுக தொண்டர்களின் வாக்குகளை திமுக.வுக்கு திசை திருப்பும் திட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
எதிர்ப்பு அலை
மூன்றாண்டுகாலம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏவாக இருந்த பெருமாள் தொகுதிக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. மலைகிராமங்களில் குடிநீருக்காக 10 கிலோமீட்டர்வரை செல்லவேண்டிய நிலை உள்ளதாம். அதனால் அதிமுகவிற்கு எதிரான அலையே வீசுகிறது என்கின்றனர்.
திமுக புதிய வியூகம்
திமுக வேட்பாளர் மாறனுக்கு பக்கபலமாக எம்.பி. செல்வகணபதி தலைமையில், மாவட்டச் செயலர்களும், முன்னாள் அமைச்சர் களும் சூடுபறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில், செல்வகணபதிக்கு தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவிக்கக்கூடிய அதிமுக-வினர் மூலம், அந்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களை திமுக பக்கம் திசை திருப்பி வாக்குகளைப் பெற அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
வீடு வீடாக பிரச்சாரம்
அதிமுக அமைச்சர்கள் அனைவரும் களத்தில் இறங்கியுள்ள நிலையில், எம்.பி. செல்வகணபதி ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று, தெருமுனைப் பிரச்சாரம் செய்வதும், அங்குள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பழைய பாசத்துடன் அணுகியும் வாக்கு சேகரித்து வருகிறார்.
தேமுதிக ஆதரவு?
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக-வுக்கு நேரடிப் போட்டியாக திமுக களமிறங்கியுள்ளது. தேமுதிக தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்துள்ள நிலையில், அந்தக் கட்சி தொண்டர்களின் வாக்கு களைப் பெற இவ்விரு கட்சிகளும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கேப்டனின் பார்வை யார் பக்கம் திரும்பும்? தனது கட்சித் தொண்டர்களை யாருக்கு வாக்களிக்க வைப்பார் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. விஜயகாந்த்தின் முழு கவனமும் இப்போது டெல்லி சட்டமன்ற தேர்தலில் உள்ளதால் ஏற்காடு தேர்தலைப் பற்றி என்ன முடிவெடுப்பார் என்பது பற்றி தேமுதிகவினரே குழம்பித்தான் போயிள்ளனராம்.
வெற்றிக்கனி யாருக்கு?
ஆளுங்கட்சிக்கு சவாலாக உள்ள ஏற்காடு இடைத்தேர்தலில், வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பிரச்சாரம் செய்துவரும் அதிமுக நிர்வாகிகள், சொந்தக் கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களையும், எம்.பி. செல்வகணபதியின் ஆதரவாளர்களையும் சமாளிப்பது சற்றே கடினம்தான் என்கின்றனர்.