திருமண நாளில் வீட்டிற்கு வராத கணவர்.. கள்ளக் காதலி வீட்டின் முன்பு முதல் மனைவி மகளுடன் போராட்டம்
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே இளம்பெண் மகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடலூர்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கணவனின் கள்ளக்காதலி வீட்டின் முன்பு முதல் மனைவி தனது மகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றி வருபவர் தணிகைவேல். இவருக்கும் கடலூர், குறிச்சிப்பாடியை அடுத்த குண்டியமல்லூரைச் சேர்ந்த சத்யா என்பவருக்கும் கடந்த 2008ல் திருமணம் நடந்தது. தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார்.
இதனிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தணிகைவேல் கடலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்கு பின்னர் தன்னுடைய மனைவி சத்யாவுடன் குடும்பம் நடத்துவதை தணிகைவேல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தணிகைவேல் பற்றி சத்யா விசாரித்துள்ளார்.
அப்போது நெல்லிக்குப்பம் அருகே பென்னைக்காடன் என்ற பகுதியைச் சேர்ந்த விதவைப் பெண் அர்ப்புதம் என்பவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அர்ப்புதத்துடன் தொடர்பை துண்டிக்கும் படி சத்யா கூறிவந்துள்ளார்.
இந்த நிலையில் தனது திருமண நாளான நேற்று அர்ப்புதம்மாளின் வீட்டு முன்பு மகளுடன் சத்யா சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சத்யாவை சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது