தஞ்சை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி.. விபத்தில் சாலையின் நடுவில் அமர்ந்திருந்த 3 பேர் பலி
தஞ்சை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி.. விபத்தில் சாலையின் நடுவில் அமர்ந்திருந்த 3 பேர் பலி
Recommended Video
தஞ்சை: தஞ்சை அருகே கும்பகோணம் புறவழிச்சாலையில் இன்று அதிககாலை நிகழ்ந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த லாரி அதிவேகமாக மோதியதில் சென்டர் மீடியனில் அமர்ந்திருந்தவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
விபத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார் ஆகியவையும் சேதம் அடைந்தன. சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புறவழிச்சாலைக்கு சென்ற நண்பர்கள்
தஞ்சை மாவட்டம் நாட்டாணி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத். இவர் கட்டிட காண்டிராக்ட் வேலை செய்து வந்தார். மாரியம்மன் கோவில் மருங்கையை சேர்ந்த சுதாகர், அசூரமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் அதிகாலையில் சந்திப்பது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை பிரசாத், சுதாகர் இரண்டு பேர் காரிலும், இருசக்கர வாகனத்தில் சந்திரசேகர் என்பவரும் தஞ்சை அடுத்த கடகடப்பை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மாரியம்மன்கோவில்-கும்பகோணம் புறவழிச்சாலைக்கு சென்றுள்ளனர்.

விபத்து ஏற்படுத்திய லாரி
பின்னர் தங்கள் வாகனங்கள் புறவழிச்சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் முதலில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம், மற்றும் கார் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அந்த வானங்கள் நொறுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர் ஸ்டியரிங்கை வலதுபுறம் வேகமாக திருப்ப சென்டர் மீடியனில் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதி நின்றது.

நண்பர்கள் நசுங்கி பலி
லாரி வேகமாக மோதியதில் அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பிரசாத், சுதாகர், சந்திரசேகர் 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதிகாலை நேரம் என்பதால் இந்த விபத்து குறித்து அருகில் இருந்தவர்களுக்கு உடனடியாக தெரியவில்லை என கூறப்படுகிறது. பின்னர் அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக காவல்துறைக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவம் கேள்விபட்டு வந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் விபத்தில் 3 பேரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

தலைமறைவான லாரி ஓட்டுனர்
இதை அடுத்து 3 பேரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான லாரி ஓட்டுநரை லாரியின் பதிவெண்ணை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சையில் அதிகாலை நிகழ்ந்த இந்த கோர விபத்து அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications