7 வருட ஏமாற்றம்.. வலி.. டெல்டா கோட்டையை மீட்டெடுக்கும் ஸ்டாலின்.. 40 இடங்களை வாரி சுருட்டும் திமுக?
தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் இருக்கும் 40 தொகுதிகளை மொத்தமாக கைப்பற்றும் திட்டத்தில் திமுக இருக்கிறதாம்.. வேறு எங்கு சறுக்கினாலும் டெல்டாவில் மட்டும் சறுக்கல் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று திமுக கேம்ப் நம்புகிறதாம்!
தமிழக சட்டசபை தேர்தலில் எப்போதும் டெல்டா தொகுதிகள் முக்கிய பங்கு வகிக்கும். அதிமுக, திமுக என்று இரண்டு கட்சிகளும் இங்கு மிகவும் வலுவாகவே இருக்கும். பொதுவாக டெல்டாவில் உள்ள அதிமுக, திமுக மாவட்ட செயலாளர்கள்தான் தங்களின் கட்சிக்குள்ளும் அதிக வாய்ஸ் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த அளவிற்கு டெல்டா அரசியல் வலிமையானது!
இங்கு அதிமுக வலிமையாக இருந்தாலும் கூட.. 2014 வரை டெல்டாவில் எப்போதும் திமுகதான் ஜெயிக்கும் என்ற நிலையே இருந்தது. 2011 சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்த போது கூட டெல்டாவில் நன்றாகவே பர்பார்ம் செய்து இருந்தது.
அதிமுக வெற்றி
ஆனால் திமுகவின் இந்த கோட்டையை 2014 லோக்சபா தேர்தலில் மொத்தமாக அதிமுக கைப்பற்றியது. திமுக -காங்கிரஸ் எதிர்ப்பு அலை நிலவியதாலும், டெல்டா அரசியல் மொத்தமாக திசை மாறியதாலும் இங்கு திமுகவின் ஸ்டார் லோக்சபா வேட்பாளர்கள் எல்லாம் தோல்வி அடைந்தனர். திமுக தனது இரும்பு கோட்டையாக நினைத்த டெல்டாவை அந்த லோக்சபா தேர்தலில் அதிமுக பிடித்தது.
ஆனால் என்ன
அதன்பின் டெல்டாவில் மீண்டும் திமுக வெற்றிபெறுமா, மீண்டும் பழைய கோட்டையை பிடிக்குமா என்றெல்லாம் சந்தேகம் நிலவியது. ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டம், சசிகலா குடும்பம் மன்னார்குடியில் வாய்ஸ் இழந்தது, பூண்டி. கலைவாணன், டிஆர்பி ராஜாவின் தொடர் எழுச்சி, திமுக மாவட்ட செயலாளர்களின் அசாத்திய உழைப்பு, மக்கள் ஆதரவு என்று பல காரணங்களால் திமுக மீண்டும் டெல்டாவை கைப்பற்றியது.
கைப்பற்றியது
மொத்தமாக விட்ட இடங்களை எல்லாம் 2019 லோக்சபா தேர்தலில் டெல்டாவில் மீண்டும் திமுக பிடித்தது. ஆனாலும் 2014ல் லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட அவமானத்திற்கு இன்னும் பழி தீர்க்கவில்லை என்கிறார்கள் திமுகவிற்கு நெருக்கமானவர்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 7 வருடம் கழித்து தற்போது சட்டசபை தேர்தலில் திமுக மொத்தமாக டெல்டாவை கைப்பற்றும் திட்டத்தில் இருக்கிறது. இதற்காக தனியாக பெரிய டீமையே திமுக களமிறக்கி உள்ளது .
திமுக எப்படி
திருவாவூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, பட்டுக்கோட்டை என்று முக்கியமான விவசாய மாவட்டங்கள் அடங்கியதுதான் டெல்டா. இன்னும் சில அருகாமை மாவட்டங்களும் டெல்டாவிற்கு கீழ்தான் வரும். மொத்தமாக டெல்டா மாவட்டங்களில் 46 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 46 மாவட்டங்களில் 40ஐ கைப்பற்றுவதுதான் திமுகவின் திட்டமாம்.
திமுக திட்டம்
மொத்தமாக 40 தொகுதிகளை வெல்ல வேண்டும்.. இது திமுகவின் மொத்த வெற்றியையே உயர்த்தும்.. இதைத்தான் நம்புகிறோம்.. என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள் என்று ஸ்டாலின் உறுதியாக சொல்லிவிட்டாராம். ஹைட்ரோகார்பன் திட்டம், விவசாய சட்ட திருத்தங்கள் என்று பல விஷயங்களால் டெல்டா விவசாயிகள் அதிமுக அரசு மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.இங்கு வன்னியர் வாக்கு கணிசமாக இருந்தாலும் மற்ற இடைநிலை ஜாதியினரும் உள்ளனர்.
வன்னியர் இடஒதுக்கீடு
வன்னியர் உள் ஒதுக்கீட்டால் இந்த இடைநிலை ஜாதியினர் கொதிப்பில் இருக்கிறார்கள். இதை எல்லாம் பயன்படுத்தி டெல்டாவில் மீண்டும் மொத்தமாக மகுடம் சூடலாம் என்ற நம்பிக்கையில் திமுக இருக்கிறது. திமுக சார்பாக டெல்டாவில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். குறிஞ்சிப்பாடி - எம்ஆர்கே பன்னீர்செல்வம், நெய்வேலி - சபா ராஜேந்திரன் ஜெயங்கொண்டம் - கே.எஸ்.கண்ணன், பட்டுக்கோட்டை - அண்ணாதுரை, ஒரத்தநாடு - ராமச்சந்திரன்,
லிஸ்ட்
திருவெறும்பூர் - அன்பில் மகேஷ், திருச்சி மேற்கு - கே.என்.நேரு, கரூர் - வி.செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி - இளங்கோ, தஞ்சை - நீலமேகம் திருவையாறு - துரை சந்திரசேகரன், குன்னம் - சிவசங்கர், பெரம்பூர் - பிரபாகரன் துறையூர் - ஸ்டாலின் குமார், முசிறி - தியாகராஜன், மணச்சநல்லூர் - கதிரவன் லால்குடி - சவுந்திரபாண்டியன், கும்பகோணம் - அன்பழகன் நன்னிலம் - ஜோதிராமன், திருவாரூர் - கலைவாணன், மன்னார்குடி - டி.ஆர்.பி ராஜா வேதாரண்யம் - வேதரத்தினம், பூம்புகார் - நிவேதா முருகன், புவனகிரி - துரை சரவணன்
வலிமை
இந்த லிஸ்டில் கலைவாணன், டி .ஆர் .பி ராஜா, அன்பில் மகேஷ் உள்ளிட்ட 30 பேர் கண்டிப்பாக வெல்வார்கள் என்று திமுக நம்புகிறதாம். 7 வருடத்திற்கு முன் 2014 லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த போது அதை திமுக மாவட்ட செயலாளர்கள் பர்சனல் தோல்வியாக எடுத்துக்கொண்டனர். 2019 லோக்சபா தேர்தலில் இதை திருப்பி கொடுத்த திமுக, மீண்டும் 2021 சட்டசபை தேர்தலிலும் அதே மேஜிக்கை நிகழ்த்த பிளான் போட்டுள்ளது.
குறி
டெல்டாவின் திமுகவின் குறைந்தபட்ச இலக்கு 40 தொகுதி. இதற்காக ஜாதி மற்றும் மக்கள் ஆதரவு பார்த்து வேட்பாளர்களை நிற்க வைத்துள்ளது. எல்லோருமே அந்தந்த தொகுதியில் பிரபலமானவர்கள். இங்கு பெரிய அளவில் திமுகவிற்குள் கோஷ்டி மோதலும் இல்லை. இதனால் ஏதாவது செய்து டெல்டாவை கைப்பற்றிவிடலாம் என்ற முடிவில் திமுக உள்ளது.