15 ஆண்டுகளுக்குப் பின் வந்து தகராறு செய்த அப்பா...இத்தனை வருஷமா எங்கே போனே?.. வெட்டிக்கொன்ற மகன்
குடும்பத்தகராறில் அம்மாவை வெட்ட வந்த தந்தையை அரிவாளால் மகன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்: 15 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தை விட்டுப்போய் இரண்டாவது திருமணம் செய்த தந்தை திரும்பி வந்து அம்மாவுடன் தகராறு செய்ததால் மகனே அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் தஞ்சாவூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட நபரின் பெயரின் கரும்பாயிரம் என்பதாகும், வயது 46. இவர் தஞ்சாவூர் நாஞ்சிகோட்டை சாலை ஈ.பி. காலனி அன்னை சத்யா நகரில் வசித்து வந்தார். திருப்பூரில் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்த இவருக்கு, ராதிகா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஜீவா, 23, விக்ரம், 20 என இரண்டு மகன்கள் உள்ளனர்.
வெயில் சுட்டெரித்தாலும் 5 நாட்களுக்கு ஜில் மழை இருக்காம் - வானிலை மையத்தின் கூல் அறிவிப்பு
கரும்பாயிரம் தஞ்சை ஈச்சங்கோட்டையை சேர்ந்த சிவசங்கரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் இரண்டாவது மனைவி சிவசங்கரி, 36 மற்றும் இரண்டு மகள்களுடன் கரும்பாயிரம் வசித்து வந்தார்.
சிங்கப்பூரில் வீட்டு வேலை
கணவன் விட்டுச்சென்றதால் முதல் மனைவி ராதிகா தனது மகன்களை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினார். சிங்கப்பூரில் வீட்டு வேலை பார்த்து வந்தார். ராதிகா தற்பொழுது சிங்கப்பூரில் இருந்து தஞ்சாவூருக்கு வந்து சுமார் ஒன்றரை மாதம் ஆகியுள்ளது. அது தெரிந்த கரும்பாயிரம் முதல்மனைவியையும் பிள்ளைகளையும் பார்க்க விரும்பினார்.
எங்களுக்கு என்ன செய்தாய்?
15 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் மனைவி ராதிகாவை பார்ப்பதற்காக, கரும்பாயிரம் வெள்ளிக்கிழமை இரவு வந்துள்ளார். பல ஆண்டுகாலமாக தவிக்க விட்டுப்போன தந்தை வந்ததை மகன்கள் விரும்பவில்லை. இத்தனை ஆண்டுகாலம் கழித்து வந்தது ஏன் என்றும் எங்களுக்கு என்ன செய்தாய் என்று மகன்கள் தகராறு செய்தனர்.
மண்வெட்டியால் தாக்கிய தந்தை
இதைத்தொடர்ந்து, கரும்பாயிரத்துக்கும், ராதிகா மற்றும் மகன்களுடன் அதிகாலை குடும்ப பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் இத்தனை ஆண்டுகள் எங்களுக்கு என்ன செய்தாய் என மகன் கேட்டு சண்டை போட்டுள்ளார். இதில் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. ஆத்திரத்தில் கரும்பாயிரம் மனைவி ராதிகாவை மண்வெட்டியால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
வெட்டி சாய்த்த மகன்
இதைப் பார்த்து கோபமடைந்த மூத்த மகன் ஜீவா தனது தந்தை கரும்பாயிரத்தை அரிவாளால் தாக்கி விட்ட தப்பி ஓடினார். இதனால் பலத்த காயமடைந்த கரும்பாயிரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவறிந்த தமிழ் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜீவா கைது
இந்த கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜேஷ் குமார் மற்றும் தலைமை காவலர்கள் உமாசங்கர் மற்றும் ராஜேஷ் மற்றும் காவலர்கள் அருள்மொழிவர்மன் நவீன் ஸ்ரீஜித் மற்றும் அழகு சுந்தரம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் ஜீவாவை தேடி வந்தனர். நாஞ்சிக்கோட்டை அருகே சுற்றி வளைத்து கைது செய்தனர் மேலும் குற்றவாளியை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து உதவி ஆய்வாளர் அபிராமி அவர்களிடம் ஒப்படைத்தனர். காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் அவர்கள் புலன் விசாரணை மேற்கொண்டனர்.