என்னப்பா நீயி.. ஒப்பிடவே கூடாது! ஓபிஎஸ் சுண்டெலி இபிஎஸ் யானை! அட்டாக் மோடில் திண்டுக்கல் சீனிவாசன்!
தேனி : திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றி போல,ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாபெரும் வெற்றி பெறுவோம் என தேனியில் முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளருமான திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் நாளை கட்சி நிர்வாகிகளான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் மற்றும் கூடலூர் நகர கழக செயலாளர் அருண்குமார் ஆகியோர் இல்ல திருமண விழாவிற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி வருகை தர உள்ளார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

தேனி வருகை
இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதன்முறையாக தேனி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதால், அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே ஜக்கையன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மிகப் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தேனி வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறவழிச்சாலை பிரிவில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

பிரம்மாண்ட வரவேற்பு
அந்த வகையில்,கேரள செண்டை மேளங்கள், கரகாட்டம், ஒயிலாட்டம், மற்றும் தமிழ் பாரம்பரிய கலைகளான மேளதாளங்கள் முழங்க, சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்து, சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளிக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கம்பம் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

மாஜி அமைச்சர்கள்
இந்த நிகழ்ச்சிக்காக வரவேற்பதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், கே.சி.கருப்பணன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். மேலும் எடப்பாடியை வரவேற்கும் பகுதி, முக்கிய பிரமுகர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்களின் வாகன நிறுத்த பகுதி,மேடை அமைய உள்ள பகுதி என தேனி முதல் கம்பத்தில் உள்ள திருமண மண்டபம் வரை அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல் சீனிவாசன்
பின்னர் தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்," முன்பு திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றது போல, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெரும். ஒரு கட்சி என்றால் தேர்தலிலில் போட்டியிட வேண்டும்.

ஓபிஎஸ் சுண்டெலி
ஆனால் தேர்தலில் விட்டு கொடுப்போம் என ஒ.பி.எஸ் கூறுவது விந்தையாக உள்ளது. அதிமுக இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை என்பது பொய்யான தகவல், எங்களோடு ஓ.பி.எஸ்-ஐ ஒப்பிடுவதையே அவமானமாகக் கருதுகிறோம். ஓபிஎஸ் சுண்டெலி இபிஎஸ் யானை. யானையுடன் சுண்டெலியை ஒப்பிடுவது எப்படி சரியாகும்? திமுக ஆட்சியில் மக்களுக்கு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாமல் அல்வா கொடுத்தது குறித்து இடைதேர்தலில் பிரசாரம் செய்வோம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications