ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து வரும் நிர்வாகிகள்.. கிடைத்த ‘ கிரீன் சிக்னல்’ - பின்னணியில் அந்த பேச்சு!?
தேனி : தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சாயத் தொடங்கியிருப்பதற்குப் பின்னணியில், ஓபிஎஸ்ஸின் சமீபத்திய நிலைப்பாடு ஒரு முக்கியமான காரணம் என்கிறார்கள் விவரமறிந்த ர.ரக்கள்.
பொதுக்குழு வழக்கு தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்த நிலையில், சமீபத்தில் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு வந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
ஓபிஎஸ்ஸின் பண்ணை வீட்டில் நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். நள்ளிரவு வரை ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறார்.
ஓபிஎஸ்ஸுக்கு பெருகி வரும் ஆதரவுக்கு பொதுக்குழு தீர்ப்பு மட்டுமே காரணம் அல்ல, சசிகலா விவகாரத்தில் அவர் எடுத்துள்ள ஸ்டாண்ட் தான் ஆதரவாளர்களைத் திரட்டி வருகிறது என்கிறார்கள்.

மேல்முறையீடு
ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23க்கு முன்னர் இருந்த நிலையே தொடரும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் ஈபிஎஸ்ஸின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவி செல்லாததாகியுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவின் மீதான இறுதி விசாரணை 25ஆம் தேதி நடைபெறும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

காய் நகர்த்தல்
இதற்கிடையே, தீர்ப்பு தனக்கு சாதகமாக கிடைத்த நிலையில், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என அழைப்பு விடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் இந்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். ஓபிஎஸ் தரப்பில் இருந்து சில முக்கிய புள்ளிகள், ஈபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவர்களிடம் பேசியும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து, கட்சியில் தனக்கான செல்வாக்கை நிலைநாட்டும் வகையில் ஓபிஎஸ் காய் நகர்த்தி வருகிறார்.

இழுக்கும் முயற்சி
ஓபிஎஸ் தரப்பு, எடப்பாடி பழனிசாமி வசமிருக்கும் முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் ஈர்க்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது. பெரிய அளவில் பொதுக்குழு உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஓபிஎஸ் தரப்பினர் ஈடுபட்டு வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது. சமீப சில நாட்களாக முக்கிய நிர்வாகிகள் பலர் ஓ.பன்னீர்செல்வத்தை தேனியில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஓபிஎஸ் ஆலோசனை
சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், தனது பண்ணை வீட்டில் தினமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ்ஸை சந்தித்துப் பேசியுள்ளனர். தமிழகம் முழுவதும் ஈபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளை தம் பக்கம் இழுக்க வேண்டும் என்ற ஓபிஎஸ்ஸின் திட்டப்படி, அவரது ஆதரவாளர்கள் முழுவேகத்தில் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாயும் புள்ளிகள்
ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவின்போது ஓபிஎஸ் பக்கமிருந்த பலர் ஈபிஎஸ் பக்கம் படையெடுத்தனர். இந்நிலையில், தற்போது ஈபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து வருகின்றனர். கைலாசபுரம் பண்ணை வீட்டில் நள்ளிரவு வரை ஓபிஎஸ்ஸை சந்தித்து முக்கிய நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பெருகும் ஆதரவு
தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்து வருவதற்கு, பொதுக்குழு வழக்கு தீர்ப்பு மட்டுமே காரணமல்ல என்கிறார்கள் விவரமறிந்த தொண்டர்கள். நீதிமன்ற தீர்ப்பு மட்டுமே காரணம் என்றால், ஈபிஎஸ் மேல்முறையீடு செய்திருக்கும் நிலையில், யாரும் ஓபிஎஸ் பக்கம் அவ்வளவு எளிதாக வரமாட்டார்கள் என்கிறார்கள்.

பின்னணி என்ன?
இணைந்து செயல்படுவோம் என சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தது, தென் மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல், தினகரன் தரப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெயா டிவியை வாழ்த்தி ஓபிஎஸ் பேசி இருப்பது, ஜெயா டிவியில் வெளியான நிலையில், அதுவும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

சிக்னல்
இந்த சம்பவங்கள் அனைத்தும், சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்படும் வாய்ப்பை உறுதி செய்திருப்பதால், பல நிர்வாகிகள் நம்பிக்கையுடன் ஓபிஎஸ்ஸை அணுகத் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருவதற்கும் முக்கியமான காரணம் இதுதானாம்.












Click it and Unblock the Notifications