ஓபிஎஸ் மகன் ஓபிஆரையே ஓரம்கட்டிய தேனி மாஜி கவுன்சிலர்! மஞ்சளுடன் மாடியில் காய்ந்த சிறுத்தை தோல்-ஷாக்
தேனி: தேனியில் சிறுத்தை இறந்த விவகாரத்தில் எம்பியாக உள்ள ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்பியிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் வேளையில் அவரை விஞ்சும் வகையில் முன்னாள் கவுன்சிலர் வீட்டில் சிறுத்தையில் தோல் மஞ்சள்பூசப்பட்டு மொட்டை மாடியில் காயவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டங்களில் ஒன்றாக தேனி உள்ளது. இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனவிலங்குகளை சிலர் வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வனவிலங்குகளின் தோல் உள்பட பிற பொருட்களை விற்பனை செய்தும் வருகின்றனர்.
IPC 304A.. பிரியா மரணம் மருத்துவ அறிக்கையை தொடர்ந்து கடுமையாக்கப்பட்ட வழக்கு பிரிவு- போலீஸ் ஆக்ஷன்!
வனத்துறை சோதனை
இந்நிலையில் தான் தேனி அருகே வடபுதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்டு அம்மாபட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வீட்டில் சிறுத்தையின் தோல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனி வனத்துறை அதிகாரிகள் அம்மாபட்டி கிராமத்துக்கு சென்று குறிப்பிட்ட வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தனர்.
மஞ்சள் பூசப்பட்ட சிறுத்தை தோல்
அப்போது மாடியில் சிறுத்தையின் தோல் மஞ்சள்தூள் பூசப்பட்டு காயவைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த சிறுத்தையின் தோலை வனத்துறையினர் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில் சிறுத்தையின் தோல் துரைப்பாண்டி -வேல்மணி தம்பதியின் வீட்டில் கைப்பற்றப்பட்டு தெரியவந்தது. இதில் மனைவி வேல்மணி வடபுதுப்பட்டி ஊராட்சி 13வது வார்டு உறுப்பினராக இருந்ததும் தெரியவந்தது.
வேட்டையாடப்பட்டதா?
இதனால் துரைபாண்டியை வனத்துறையினர் தேடி வருகின்றனர். அவர் சிக்கினால் தான் சிறுத்தை எங்கு வேட்டையாடப்பட்டது? எதற்காக வேட்டையாடப்பட்டது? என்பது தொடர்பான பிற விபரங்கள் வெளியாகும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் துரைபாண்டி பற்றிய விபரங்களை சேகரித்து வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ரவீந்திராந் எம்பி விவகாரம்
முன்னதாக தேனி நாடாளுமன்ற தொகுதியின் எம்பியும், ஓ பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் சிறுத்தை இறப்பு தொடர்பான சர்ச்சையில் சிக்கினார். அதாவது தேனி பெரியகுளம் அருகே உள்ள ரவீந்திரநாத்துக்கு சொந்தமான நிலத்தில் மின்வேலியில் சிக்கி சிறுத்தை இறந்தது. இதில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ரவீந்திர நாத் எம்பியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாகி இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினரின் வீட்டில் இருந்து சிறுத்தையின் தோல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.