ஒரே நிமிஷம் தான்! எங்க இங்க இருந்த கூட்டத்தை காணோம்! எஸ்கேப்பான நிர்வாகிகள்! வெறிச்சோடிய ஓபிஎஸ் வீடு
தேனி : அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே ஓபிஎஸ் வீட்டு முன்பு குவிந்திருந்த ஆதரவாளர்களில் பலர் எஸ்கேப் ஆனதால் ஓபிஎஸ்-ன் வீடு வெறிச்சோடி காணப்படுகிறது.
அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே நிலவி வரும் ஒற்றை தலைமை விவாதம் குறித்த பிரச்சனையில் மீண்டும் ஒரு தற்காலிக முடிவு எட்டப்பட்டிருக்கிறது.
ஜூலை மாதம் பதினோராம் தேதி நடைபெற்ற அதிமுகவின் இரண்டாவது பொதுக் குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
போடுங்கண்ணே வெடிய.. ஆதரவாய் வந்த தீர்ப்பு! எடப்பாடி ஹாப்பி அண்ணாச்சி! குதூகலமான அதிமுக தொண்டர்கள்!
உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்னதாக இருந்த நிலையை தொடர வேண்டும் என உத்தரவிட்டார் இதனால் ஓ பன்னீர்செல்வம் தரப்பு குதூகலம் அடைந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீடு செய்தது.
இபிஎஸ் உற்சாகம்
இரு தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்ட நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த நீதிபதிகள் இன்று தீர்ப்பை வழங்கினர். அதில் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதோடு பொதுக்குழு செல்லும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஆதரவான தீர்ப்பாக இது கருதப்படுகிறது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது செல்லும் என்பதும் இந்த தீர்ப்பின் ஒரு முக்கிய சாராம்சமாகும்.
உற்சாக மிகுதி
இதையடுத்து தமிழகம் முழுவதிலும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் உற்சாக மிகுதியில் காணப்படுகின்றனர். திண்டுக்கல் கரூர் சேலம் ராமநாதபுரம் சிவகங்கை திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் தலைமையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஓ பன்னீர்செல்வம் தரப்பு கடும் அதிர்ச்சியில் இருக்கிறது.
வெறிச்சோடிய ஓபிஎஸ் வீடு
இன்று காலை தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்தஊரான பெரியகுளம் வீட்டில் காலையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். சுமார் 10:30 மணி அளவில் உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியான போது அங்கிருந்த நிர்வாகிகள் பலர் நைசாக நழுவிக் கொண்டனர். 11 மணி அளவில் கோவை செல்வராஜ், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளை தவிர யாருமே அங்கு இல்லை. தீர்ப்பு வெளியாகி 10 நிமிடத்திற்குள் இவ்வளவு பெரிய மாற்றமா என ஓபிஎஸ் தரப்பில் அதிர்ச்சியில் ஆழ்ந்ததாக கூறுகின்றனர் தேனி ரத்தத்தின் ரத்தங்கள்.