பாஜகவில் இணைகிறாரா ஓபிஎஸ்? தேனி சென்றவருக்கு காவித்துண்டு அணிவித்து வரவேற்ற ‛தாமரை‛ நிர்வாகிகள்
தேனி: அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில் இன்று மதுரையில் இருந்து தேனிக்கு சாலை மார்க்கமாக சென்ற ஓ பன்னீர் செல்வத்துக்கு காவித்துண்டு அணிவித்து தேனி மாவட்ட பாஜகவினர் வரவேற்றனர். இதனை ஓ பன்னீர் செல்வம் ஏற்றுக்கொண்டால் அவர் பாஜகவில் இணைகிறாரா? என சிலர் சந்தேகத்தை கிளப்பி உள்ளனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விஷயத்தில் பெரும் பிரச்சனை வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது.
ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ பன்னீர் செல்வம் சில நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக பொதுக்குழுவில் அவமானப்படுத்தப்பட்டார். மேலும் ஜூலை 11ல் நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யபடுவார் என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.

டெல்லியில் ஓ பன்னீர் செல்வம்
இதனால் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து ஓ பன்னீர் செல்வம் வெளியேறினார். இதையடுத்து பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனுத்தாக்கல் நிகழ்ச்சிக்க ஓ பன்னீர் செல்வம் டெல்லி சென்றார். டெல்லியில் அவர் பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஓ பன்னீர் செல்வத்துக்கு முழு வெற்றி கிடைக்காவிட்டாலும் இந்த சந்திப்பு அவருக்கு திருப்திகரமாக இருந்ததாக கூறப்படுகிறது.

தேனி சென்ற ஓ பன்னீர் செல்வம்
இதையடுத்து நேற்று ஓ பன்னீர் செல்வம் டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். இன்று சென்னையில் இருந்து விமானத்தில் ஓ பன்னீர் செல்வம் மதுரை வந்தார். அங்கிருந்து சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் சாலை மார்க்கமாக தனது பிரசார வாகனத்தில் புறப்பட்டார். அப்போது அவரை ஏராளமான தொண்டர்கள் வரவேற்றனர்.

பட்டாசு வெடித்து வரவேற்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை முன்பு ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து அவரை வரவேற்றனர். பின்னர் ஆண்டிப்பட்டியில் இருந்து முக்கிய தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றார். தேனி சிக்னல் முன்பு அதிமுகவினர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து தனது சொந்த ஊரான பெரிய குளத்திற்கு சென்றார். பெரியகுளத்தில் உள்ள தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து அதிமுகவினர் வரவேற்றனர் . அருகில் உள்ள காளியம்மன் கோவிலில் தரிசனம் செய்த பின்னர் தனது வீட்டிற்கு சென்றார். இதனைத் தொடர்ந்து பெரிய நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அவரது சொந்த வீட்டிற்கு சென்றார் அப்போது அவருக்கு ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

காவித்துண்டு அணிவித்து வரவேற்பு
முன்னதாக மதுரை மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டத்தின் நுழைவு பகுதியான ஆண்டிபட்டி கணவாயில் ஓ பன்னீர் செல்வத்தை தேனி மாவட்ட பாஜகவினர் வரவேற்றனர். மாவட்ட தலைவர் பிசி பாண்டியன் தலைமையில் ஓ பன்னீர் செல்வத்துக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டது. இதனை ஓ பன்னீர் செல்வம் பணிவுடன் ஏற்றுக்கொண்டார். தற்போது இதுதொடர்பான படங்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம் பாஜகவில் சேர உள்ளாரா? என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications