அயர்லாந்து கால்வாயை அசால்ட்டாய் நீச்சலடித்து கடந்த சினேகன்! சின்ன வயதிலேயே இப்படி ஒரு சாதனையா?
தேனி : இங்கிலாந்தின் வடக்கு கால்வாய் 35 கிலோமீட்டர் கடல் தூரத்தை நீந்தி கடந்த 14 வயது தேனி மாணவன் சினேகன் சாதனை படைத்துள்ளதோடு, ஸ்காட்லாந்து- அயர்லாந்து வடக்கு கால்வாயை 14 வயதில் கடந்த முதல் நீச்சல் சாதனையாளர் என்ற பெருமையையும் ஒருசேர பெற்றிருக்கிறார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நீதிராஜன் அனுஷா தம்பதியினரின் மகன் சினேகன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சினேகன் சிறுவயது முதலே நீச்சல் பயிற்சியில் பல்வேறு சாதனைகள் புரிந்து மாநில மற்றும் தேசிய அளவில் விருதுகளை பெற்றுள்ளார் .
மேலும் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை நீச்சல் பயிற்சி செய்து 56 கிலோமீட்டர் தூரத்தை 19.45 நிமிடங்களில் கடந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
ஜான் சீனா கின்னஸ் சாதனை.. உடல்நலம் பாதித்த 650 குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி அசத்தல்!
தேனி மாணவன்
தற்போது அயர்லாந்து முதல் ஸ்காட்லாந்து வரையிலான நார்த் சானல் எனப்படும் வடக்கு கால்வாய் 35 கிலோமீட்டர் தூரத்தை 14 மணி 36 நிமிடங்களில் கடந்து சாதனை புரிந்தார். 12 டிகிரி செல்சியஸ் அளவில் மிகவும் அதிக குளிர் மற்றும் ஆபத்தை விளைவிக்க கூடிய சுறா, ஜெல்லி மீன்கள் நிறைந்த அயர்லாந்து கடல் பகுதியை நீந்தி கடப்பது மிகவும் கடினம் . நீச்சல் வீரர் தேனி சினேகன் பயிற்சியாளர் விஜயகுமார் மற்றும் குழுவினர் 6 பேர் இணைந்து இந்த சாதனையை மேற்கொண்டுள்ளனர்.
நீச்சல் சாதனை
இங்கிலாந்து டொனகடே துறைமுக பகுதியில் பயிற்சிக்கு பின் வடக்கு அயர்லாந்திவிருந்து கடந்த 20ம் தேதி காலை 6.30 மணிக்கு நீச்சல் சாதனையை துவக்கி இரவு 8 மணி 9 நிமிடங்களில் மொத்தம் 14 மணி மற்றும் 36 நிமிடங்களில் ஸ்காட்லாந்து பகுதியை நீந்தி சாதனை புரிந்தார். கடந்த 2022 வருடம் மார்ச் 28ம் தேதியில் தனுஷ்கோடி முதல் தலைமன்னாரு, தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி பகுதியை 56 கிலோமீட்டர் தூரத்தை குறுகிய நேரத்தில் நீந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளதோடு குறிப்பிடத்தக்கது.
மாணவன் பெருமிதம்
நீச்சல் சாதனை புரிந்த மாணவன் சினேகன் கூறுகையில்," தனுஷ்கோடி முதல் தலைமன்னாரு கடலில் நீச்சலடித்து சாதனை புரிந்துள்ளேன். தற்போது சவாலான வடக்கு கால்வாயில் நீச்சலில் சாதனை படைத்துள்ளேன். எதிர் காலத்தில் ஆங்கில கால்வாய் கடப்பதே என் லட்சியம், என மிகப் பெருமையுடன் கூறுகிறார்.
அடுத்த சாதனை!
இதுகுறித்து மாணவன் சினேகனின் பயிற்சியாளர் விஜயகுமார் கூறும் போது, சினேகன் கடந்த எட்டு வருடங்களாக நீச்சல் பயிற்சி செய்து கொண்டு வருகிறார். கடந்த மார்ச் மாதம் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை மொத்தம் 56 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து சாதனை புரிந்தார். தற்போது சவாலான வடக்கு கால்வாய் அயர்லாந்து முதல் ஸ்காட்லாந்து வரை 35 கிலோமீட்டர் தூரம் 14 வயதில் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளர். எதிர்காலத்தில் ஆங்கில கால்வாய் கடப்பதே சினேகனின் லட்சியம்" என கூறினார்.