90 வயதில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி.. எதிர்த்தவர்களுக்கு டெபாசிட் காலி.. அசர வைத்த பாட்டி!
நெல்லை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 90 வயது மூதாட்டி வெற்றி பெற்றார். தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்தது.

திமுக அமோக வெற்றி
நேற்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விடிய, விடிய நடைபெற்று தற்போதும் நடந்து வருகிறது. தற்போது வரையில் வெளியான முடிவுகளின்படி பெரும்பாலான இடங்களில் திமுகவே முன்னிலை வகித்து வருகிறது. சட்டமன்ற தேர்தலைபோல் உள்ளாட்சி தேர்தலிலும் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. 140 மாவட்ட கவுன்சிலர்கள் இடங்களில் திமுக 132 இடங்ககளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 4 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

90 வயது மூதாட்டி வெற்றி
1,381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 890 இடங்களுக்கு மேலாக முன்னிலை வகிக்கிறது. அதிமுக 177 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. இது ஒருபுறமிருக்க இந்த உள்ளாட்சி தேர்தலில் பிரதான கட்சிகளின் பிரமுகர்களே தோல்வியை தழுவி இருக்கும் நிலையில் 90 வயது மூதாட்டி ஒருவர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

டெபாசிட் இழக்க செய்தார்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யூனியன் சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட 90 வயதான மூதாட்டி பெருமாத்தாள் 1,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதுவும் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட் இழக்க செய்து அசுர வெற்றி பெற்றுள்ளார் மூதாட்டி பெருமாத்தாள். 90 வயதில் வெற்றி பெற்ற மூதாட்டிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

திருநெல்வேலி மாவட்ட நிலவரம்
பிரமாண்ட வெற்றி பெற்ற மூதாட்டி பெருமாத்தாள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொண்டார். அப்போது அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து அவரை அழைத்து சென்றனர். திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை 12 மாவட்ட கவுன்சிலர் பதவியிலும் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. இதேபோல் தென்காசி 14 மாவட்ட கவுன்சிலர் பதவியிலும் தி.மு.க.வே முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications