அனைத்து பேருந்துகளுக்கும் கதவு எவ்வளவு முக்கியம்.. இந்த வீடியோவை பாருங்கள்.. கலங்கும் கல்யாண வீடு
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பேருந்தில் இறங்குவதற்காக இருக்கையில் இருந்து எழுந்த பெண், எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். பேருந்துகளில் கதவு இருந்திருந்தால் அவர் உயிரிழந்திருக்க மாட்டார். பேருந்துகள் அனைத்திலும் கட்டாயம் கதவு பொறுத்த அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
Recommended Video
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் இருந்து கழுகு மலைக்கு தனியார் பேருந்து ஆட்களை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அதில் தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள ராமலிங்கபுரம் தீப்பெட்டி ஆபீஸ் பின்புறமுள்ள காலனி பகுதியை சேர்ந்த மகேஸ்வரி (46) என்ற பெண் ஏறி உள்ளார்.
தனது மகளின் திருமணத்திற்காக கழுகுமலையில் இருந்து பொருட்களை வாங்கிக்கொண்டு தனியார் பேருந்தில் பயணித்த மகேஸ்வரி சொந்த ஊரான ராமலிங்கத்தில் இறங்குவதற்காக இருக்கையில் இருந்து எழுந்தார். அப்போது பேருந்தின் வேகம் காரணமாக எதிர்பாராதவிதமாக அவர் கம்பியை படிக்க முடியாமல் நிலை தடுமாறி பேருந்தின் முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மகேஸ்வரி பலி
உடனே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். இதனை அடுத்து அங்குள்ளவர்கள் விபத்தில் சிக்கிய மகேஸ்வரியை மீட்டு குருவிகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி உயிரிழந்தார் .

சிசிடிவி காட்சி
இரண்டு நாளில் மகளுக்கு திருமணம் என்கிற நிலையில் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர் பேருந்திலிருந்து கீழே விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகளை பார்க்கும் போது, பேருந்தில் சிசிடிவி கேமராவைப் போல், கதவும் முக்கியம் என்பது தெரிகிறது. ஏனெனில் சிசிடிவி கேமராக்கள் திருட்டை தடுக்க உதவுகிறது என்றால், பேருந்தில் கதவு இருந்தால் பயணிகளின் உயிரை அது காப்பாற்றும்.

பள்ளி பேருந்து
அனைத்து தனியார் பேருந்துகளிலும் கட்டாயம் கதவு அமைக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவர ஆவண செய்ய வேண்டும். பேருந்து ஓட்டையில் தவறி விழுந்து பள்ளி மாணவி உயிரிழந்த பின்னரே பள்ளி பேருந்துகளின் தரத்தை ஆய்வு செய்ய ஒவ்வொரு வருடமும் சோதனை செய்யும் நமது அரசுகள், இனிமேல் தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் என அனைத்திலும் கட்டாயம் கதவு அமைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

கல்யாண வீடு
ஏனெனில் மனித உயிர்கள் விலை மதிக்க முடியாதவை. இரண்டு நாளில் மகளின் திருமணத்தை காண ஆசையுடன் இருந்த தாய் இப்போது உயிருடன் இல்லை. இரண்டு நாளில் திருமணம் என்கிற நிலையில் இருந்த மகள், தன் தாயை பறிகொடுத்து தவிக்கிறார். இரண்டு குடும்பங்கள் நிலைகுலைந்து போய் விட்டன.

சட்டம் இயற்ற வேண்டும்
விபத்தால் ஏற்பட்டுள்ள இந்த இறப்பை இனி ஒரு முறை ஏற்படாமல் தடுக்க அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகளிலும் கட்டாயம் கதவு இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications