ஒரு கொடி நட ரூ.10000.. பணத்தை விதைத்து தமிழ்நாட்டை கைப்பற்ற நினைக்கும் பாஜக.. வைகோ ஆவேசம்!
ஒரு ஊரில் கொடி நட பாஜக பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வருகிறது என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
திருநெல்வேலி : பாஜக பணத்தை விதைத்து ஒவ்வொரு பகுதிகளிலும் கொடியேற்றி வருகிறது. ஒரு ஊரில் கொடியை கட்டுவதற்கு ரூ. 10,000 கொடுத்து வருகிறது. பணத்தை விதைத்து தமிழ்நாட்டைக் கையகப்படுத்தலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் அண்ணாமலை கூட்டத்தின் எண்ணம் பலிக்காது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான அரசாக செயல்பட்டு வருகிறது. இந்துத்துவாவை, சனாதன தர்மத்தைத் திணிக்க முயற்சி செய்து வருகிறது எனக் குற்றம்சாட்டினார்.
நெல்லை பாளையங்கோட்டையில் தூய சவேரியார் கல்லூரி மாணவ மன்ற நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
பெண்கள் தான் குறியே.. விடாது துரத்தும் தாலிபான்கள்..ஆப்கனில் விழுந்த புதிய தடை.. அடபாவமே! என்னாச்சு?
சேது சமுத்திர திட்டம்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "சேது சமுத்திர திட்டம் என்பது இந்த நாட்டுக்கு தேவையான திட்டம், அறிஞர் அண்ணா இதற்காக குரல் கொடுத்தார். இந்த திட்டத்திற்காக நான் நடைபயணம் மேற்கொண்டேன். நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக ஒருமுறைக்குப் பலமுறை உரையாற்றினேன். சேது சமுத்திர திட்டம் தென் மாவட்டங்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதோடு தூத்துக்குடி துறைமுகத்திற்கு துணைத் திட்டமாக அமையும். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும் இந்த சேது சமுத்திர திட்டம் உயர்த்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பணத்தை விதைத்து
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளுக்கு நாள் மாற்றி, மாற்றிப் பேசி வருகிறார். பாஜக பணத்தை விதைத்து ஒவ்வொரு பகுதிகளிலும் கொடியேற்றி வருகிறது. ஒரு ஊரில் கொடியை கட்டுவதற்கு ரூ. 10,000 கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பணத்தை விதைத்து கையகப்படுத்தலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறது அண்ணாமலை கூட்டம். அவர்களின் எண்ணம் இங்கு நிறைவேறாது.
தமிழையும் தமிழ்நாட்டையும் அழிக்கப் பார்க்கிறது
திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான அரசாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் மத்திய அரசு விரோதமான அரசாக செயல்படுவதுடன் இந்துத்துவாவை, சனாதன தர்மத்தைத் திணிக்க முயற்சி செய்து வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக மக்கள் விரோத போக்கை நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழினத்திற்கும் விரோதமாக செயல்பட்டு வருகிறது. தமிழையும் தமிழ்நாட்டையும் அழிக்கப் பார்க்கிறது பாஜக.
விவசாயம் அழிந்துவிடும்
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு தமிழ்நாட்டிலேயே அதிக முயற்சி மேற்கொண்டவன் நான் என்ற பெருமிதம் எனக்கு இருக்கிறது. சீமைக்கருவேல மரங்களை அழிக்காவிட்டால், விவசாயமும் அழிந்துவிடும், விவசாயத்தை நம்பி வாழும் மக்களின் வாழ்க்கையும் அழிந்துவிடும். சீமைக் கருவேல மரங்களை அகற்றி விவசாயத்தைக் காக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.