பாஜக, என்.ஐ.ஏ முபினுக்கு பயிற்சி கொடுத்ததாக ஒரு தகவல் பரவுதே.. ஆளுநர் பேச்சு பற்றி அப்பாவு ‘பொளேர்’!
நெல்லை : கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தடயங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக எந்த ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார் என தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தமிழக ஆளுநர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை என்.ஐ.ஏவுக்கு மாற்ற ஏன் தாமதம் என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி கொடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பணகுடியில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
உளறிகொண்டே இருக்காதீங்க.. இந்துத்துவா பிரசாகராக மாறிய ஆளுநர் ஆர்என் ரவி.. வைகோவுக்கு வந்ததே கோபம்
நேரில் சென்ற சபாநாயகர்
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இசக்கிமுத்து என்பவர் கடந்த 23ஆம் தேதி அனுமன் நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு பள்ளியில் படிக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இசக்கிமுத்துவின் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியை வங்கிக் கணக்கில் செலுத்தி இசக்கிமுத்துவின் வீட்டிற்கு நேரில் சென்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வழங்கினார். மேலும் இரண்டு பிள்ளைகளின் படிப்பிற்கான செலவை தானே ஏற்றுக் கொள்வதாகவும் அவர்களிடம் உறுதி அளித்தார்.
எந்த ஆதாரத்தின் அடிப்படையில்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சபாநாயகரிடம், செய்தியாளர்கள் ஆளுநர் ரவி கோவை வெடிப்பு சம்பவம் பற்றிப் பேசியதைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, "ஆளுநரைப் போல் நானும் பொதுவான பதவியில் இருப்பவர். எனினும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று தமிழக ஆளுநர் கூறி இருக்கிறார். ஆனால், அவர் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி கூறுகிறார் என்று எனக்கு தெரியவில்லை.
ஆதாரங்கள் இருந்தால்
அவ்வாறு ஆதாரங்கள் கிடைத்து இருந்தால் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம். அந்த ஆதாரங்களை அழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு கோவை கார் வெடிப்பு பற்றி ட்விட்டர் மற்றும் பொதுவெளியில் கருத்து கூறியிருப்பதை ஆளுநர் தவிர்த்து இருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.
பாஜக
மேலும், தமிழக அரசு இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்டதாக ஆளுநர் ஏற்கனவே பாராட்டி இருக்கிறார். அதன் பின்னரும் அவர் இக்கருத்தை சொல்லி இருக்கிறார். தமிழக முதலமைச்சர் இந்த சம்பவத்தை நான்கு நாட்களுக்குள் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றி உள்ளார். கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பில் பாஜகவினர் உறுதிப்படுத்தப்படாத தகவலை பேசி வருகின்றனர்.
பாஜகவும் என்.ஐ.ஏவும் முபினுக்கு பயிற்சி?
கடந்த 2019-ல் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடைபெற்ற குண்டுவெடிப்பில் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை கார் வெடிப்பில் இறந்த முபின் சந்தித்துள்ளார். அவரை என்.ஐ.ஏ அமைப்பினர் விசாரித்துள்ளனர். பின்னர் எதற்காக அவரை விடுவித்தனர் என தெரியவில்லை. இப்போதும் கூட ஒரு விமர்சனம் உண்டு. பாஜகவும், என்.ஐ.ஏவும் இணைந்து முபினுக்கு பயிற்சி கொடுத்து அனுப்பியதாக பல பேர் சொல்கிறார்கள். ஆனால், இவற்றையெல்லாம் எந்த ஆதாரமும் இல்லாமல் கூறுபவர்களுக்கு என்ன பதிலோ, அதுதான் ஆளுநருக்கும் பதிலாக இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
தடயங்கள் அழிப்பு?
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டியதோடு, இந்த வழக்கு விசாரணையை தேசிய பாதுகாப்பு முகமைக்கு வழங்கியதில் ஏன் இவ்வளவு தாமதம் எனவும் அவர் கேள்வி எழுப்பியதுடன், இந்தச் சம்பவத்தில் தடயங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.