பல நாடுகளை வென்ற பேரரசன் சொந்த மக்களின் நிலத்தை பறிப்பாரா? இயக்குநர் பா.ரஞ்சித்தை விளாசிய சீமான்!
நெல்லை: சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்த இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட இயக்குநரான பா ரஞ்சித் கலந்துகொண்டார். அப்போது சோழ மன்னர் ராஜ ராஜ சோழனை அவர் கடுமையாக விமர்சித்தார்.
தமிழர்களின் கட்டடக்கலையை உலகளவில் பறைசாற்றிய மன்னர் ராஜ ராஜ சோழனை அவன், இவன், அயோக்கியன் என்றும் தகாத வார்த்தைகளால் விமர்சித்தார் ரஞ்சித். சோழ மன்னரை விமர்சித்த ரஞ்சித்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெண்ணடிமை உண்மை
அதே நேரத்தில் அவரது கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராஜ ராஜ சோழன் காலத்தில் பெண்ணடிமை இருந்தது உண்மை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்ய தடை
இந்நிலையில் ராஜ ராஜ சோழனை தரக்குறைவாக விமர்சித்த ரஞ்சித் மீது பல காவல்நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முன்ஜாமீன் கோரிய இயக்குநர் ரஞ்சித்தை வரும் 19ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

அணுக்கழிவுகளை பற்றி ஏன் பேசவில்லை?
இந்நிலையில் ராஜ ராஜ சோழன் குறித்து அவதூறு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இயக்குநர் ரஞ்சித் அணுக்கழிவுகளை பற்றி பேசாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களின் நிலத்தை பறித்திருப்பாரா?
ராஜ ராஜ சோழனை இன அடையாளமாக பார்க்கிறோம் என்றும் சீமான் கூறினார். மேலும் பல நாடுகளை வென்ற பேரரசன் சொந்த மக்களின் நிலத்தை பறித்திருப்பாரா என்றும் சீமான் ரஞ்சித் மீது சரமாரியாக கேள்வி கணைகளை தொடுத்தார்.












Click it and Unblock the Notifications