நான் நடிகர் அஜித் ஆபிஸ் மேனேஜர்! உங்களுக்கு வீடுகட்டி தரப்போறாரு! புது வழியில் ஆட்டைய போட்ட கும்பல்!
திருநெல்வேலி : நடிகர் அஜித் வீடு கட்டி தருவதாக கூறி அவரது ரசிகரிடமே மர்ம நபர்கள் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் மோசடி செய்ததாக நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான மோசடிகள் அரங்கேறி வருகிறது. தீபாவளி சீட்டு அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ஏமாற்றிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. தற்போது உலகமே செல்போனுக்குள் சுருங்கி விட்டது.
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் டிசைன் டிசைனாக மோசடி செய்யும் நபர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காமல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கார்டு மேல இருக்க 16 நம்பர் சொல்லு சார் வகையறா மோசடி பேர்வழிகளின் அட்ராசிட்டிகள் அடங்கியபாடில்லை.
திருச்சி சூர்யாவை தொடர்ந்து அமர் பிரசாத் ரெட்டி மீது மேலும் ஒரு பாஜக ஆதரவாளர் 'கபடி பண மோசடி' புகார்
புதுவகை மோசடி
அந்த வகையில் தற்போது புதுவகையான மோசடி ஒன்று தென் மாவட்டங்களில் அரங்கேறி வருகிறது. அஜித் வீடு கட்டி தருவதாக கூறி அவரது ரசிகரிடமே மர்ம நபர்கள் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் மோசடி செய்ததாக நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் ராஜேஸ்வரி தம்பதியினர். ஐயப்பன் தீவிரமான அஜித் ரசிகர் என்று கூறப்படுகிறது.
அஜித் ரசிகர்
இதனை பயன்படுத்திக் கொண்டு திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்துப் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் தான் அஜித் ரசிகர் மன்ற தலைவர் அவர்களின் மேலாளர் தனக்கு நெருக்கமானவர் என்று கூறி நம்ப வைத்துள்ளார். மேலும் நடிகர் அஜித் கஷ்டப்படும் ரசிகர்களுக்கு மாவட்டம் வாரியாக கணக்கெடுத்து 15 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் வீடு கட்டி தருவதற்கு முதலில் பத்திரப்பதிவுக்கான தொகை ஒரு லட்சம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
பணம் அபேஸ்
அதன் பின்பு வீடு கட்டுவதற்கான தொகை 15 லட்சமும் பத்திரப்பதிவிற்கான தொகையும் சேர்த்து உங்களின் வங்கி கணக்குக்கு வந்துவிடும் என்று கூறி சிவா என்பவர் ஏமாற்றி உள்ளார். அவர்களை உறுதியாக நம்ப வைப்பதற்கும் அவரிடம் இருந்து பணத்தை பெறுவதற்கும் நடிகர் அஜித்குமார் அவர்களின் மேலாளர் சுரேஷ் சந்திரா அலுவலகத்தில் பணிபுரிவதாக சங்கர் என்பவரை போலியாக தயார் செய்து ஐயப்பனிடம் பேசி அவர் பணி புரியும் இடத்திற்கு சென்று இருபது ரூபாய் போலி பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
புகார்
இதன் மூலமாக சிறிய சிறிய தொகையாக ஏறத்தாழ ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் வரை சிவாவிடம் கொடுத்து ஐயப்பன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியினர் ஏமாந்துள்ளனர். ஆனால் பல நாட்களாக வீடு கிடைக்காமல் பணமும் கிடைக்காமல் தாங்கள் ஏமாந்ததை அறிந்து சிவாவிடம் கேட்டதற்கு இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து தங்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் தாங்கள் அறியாமையால் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஐயப்பன் , ராஜேஸ்வரி புகார் தெரிவித்துள்ளார்.