நீட் தேர்வு தோல்வி அச்சம்- மேலும் ஒரு மாணவி தற்கொலை - தென்காசி அருகே சோகத்தில் மூழ்கிய கிராமம்!
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, நீட் தேர்வில் 3வது முறை தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில், விவசாயி மகள் ராஜலட்சுமி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவுகிறது. நீட் நுழைவுத் தேர்வான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுவதால் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு தகர்ந்து போகிறது. இதனால் அரியலூர் அனிதா தொடங்கி பல மாணவிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர்.
இத்தகைய மரணங்கள் தொடருவதால் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செயய் வேண்டும் என்பது தமிழக அரசியல் கட்சிகள் நிலைப்பாடு. தமிழக அரசும், நீட் நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு தர வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குலசேகரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மகள் ராஜலெட்சுமி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் எழுதி தேர்ச்சி பெறவில்லை. இதனையடுத்து, சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் மாணவி ராஜலட்சுமி சேர்ந்து படித்து, 3-வது முறையாக மீண்டும் நீட் தேர்வு எழுதினார். நீட் தேர்வு முடிவுகள் வரும் 7-ந் தேதி வெளியாக உள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற காரணத்தினால் சோகமாக ராஜலட்சுமி இருந்துள்ளார். தாய் தந்தையின் மருத்துவ கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்று கடுமையான மன உளைச்சலில் அவர் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று தேர்வுக்கான விடைத்தாள் ஆன்லைனில் வெளியானதை மாணவி ராஜலெட்சுமி சரி பார்த்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை தனது தந்தையை அருகேயுள்ள கடைக்கு பொருள்களை வாங்கி வருமாறு கூறியுள்ளார். அவர் அங்குள்ள கடைக்கு தன் மகளுக்காக தின்பண்டங்கள் வாங்க சென்ற போது, ராஜலெட்சுமி வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடைக்குச் சென்று வீடு திரும்பிய அமல்ராஜ், தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து மாணவியின் உடலை அவசர அவசரமாக தந்தையும், உறவினர்களும் சுடுகாட்டுக்குச் சென்று தகனம் செய்ய முயன்றபோது, அந்த கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலருக்கு இதுகுறித்து தகவல் கிடைத்துள்ளது.
பின்னர், உடனடியாக கிராம நிர்வாக அலுவலர், சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் மாணவி நீட் தேர்வில் தோல்வி பயத்தால் தான் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வில் 3வது முறை தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில், விவசாயி மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால், குலசேகரமங்கலம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.