நெல்லையில் கோர விபத்து.. 2 மாணவிகள் உள்ளிட்ட மூவர் பலி!
திருநெல்வேலி: நெல்லையில் டயர் வெடித்த கார் நிலைதடுமாறிச் சென்று சாலையின் எதிர்ப்புறம் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இரு அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த 21 வயதான திவ்யபாலா, பாவூர்சத்திரம் அருகே ஆவுடையனூர் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா காயத்ரி ஆகியோர் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் மதுரையைச் சேர்ந்த பிரிட்டோ ஏஞ்சலின் ராணி என்பவருடன் ஒரே இருசக்கர வாகனத்தில் கேடிசி நகரில் இருந்து ரெட்டியார்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
புயல் வலுவிழக்கும்... தென் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை
கார் மோதி விபத்து
இரட்டைமலை அருகே சென்ற போது எதிர் திசையில் நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார் ஒன்றின் டயர் திடீரென வெடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் திரைப்படக் காட்சிகளில் வருவது போல கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர்மீடியனை தாண்டி எதிர்ப்புறம் மாணவிகள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. கார் மோதிய வேகத்தில் திவ்யபாலா, திவ்யாகாயத்ரி, பிரிட்டோ ஏஞ்சலின் ராணி ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்..
இரு மாணவிகள் பலி
படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த திவ்யாகாயத்ரி, பிரிட்டோ ஏஞ்சலினா ராணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். மற்றொரு மாணவி திவ்யா பாலா படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். மேலும் காரில் வந்த சண்முகசுந்தரம் மற்றும் கார் ஓட்டுநரான சந்தோஷ் ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். கொடூர விபத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தோர் இதுகுறித்து காவல் துறையினருக்கும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து காயமடைந்த திவ்யபாலா, காரில் வந்த சண்முகசுந்தரம் சந்தோஷ் உள்ளிட்டோர் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
காரின் உரிமையாளரும் பலி
மருத்துவமனை செல்லும் வழியிலேயே காரில் வந்த சண்முகசுந்தரம் உயிரிழந்தார். தொடர்ந்து மாணவி திவ்யா பாலா மற்றும் கார் ஓட்டுநருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
நெல்லையில் சோகம்
விசாரணையில் மாணவிகள் 3 பேரும் கல்லூரியிலிருந்து ரெட்டியார்பட்டியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றதாகவும் அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கார் டயர் வெடித்து பைக் மோதி விபத்தில் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 3 பேர் பலியான சம்பவம் நெல்லையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது